Tamilசெய்திகள்

அமெரிக்காவில் புதிய வகை கொரோனா பரவல்!

அமெரிக்காவில் இதுவரை மொத்தம் 8 கோடியே 86 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் BA.4 மற்றும் BA.5 என பெயரிடப்பட்ட இரண்டு புதிய வகை கொரோனா தொற்றுகள் வேகமாக பரவுவதாக அமெரிக்க சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. இது ஓமிக்ரான் வகையை சேர்ந்தது என்றும் இதற்கு முந்தைய தொற்றுகளை விட வீரியம் வாய்ந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்க மக்கள் முக கவசம் அணிதல் உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பதுடன், பூஸ்டர் தடுப்பூசிகளை போட்டு கொள்ளுமாறு வெள்ளை மாளிகை அறிவுறுத்தி உள்ளது.

அமெரிக்காவில் ஏப்ரல் முதல் கொரோனா தொற்றால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது என்றும் இது புதிய வகை கொரோனா பரவலை பிரதிபலிக்கிறது என்றும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் இயக்குனர் டாக்டர் ரோசெல் வாலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

பூஸ்டர் தடுப்பூசி கடுமையான பாதிப்புக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குகிறது, ஒருவருக்கு அண்மையில் கொரோனா பாதிப்பு இருந்தால், அவர் பூஸ்டர் தடுப்பூசி போட வேண்டும் என்றும் வாலென்ஸ்கி தெரிவித்தார். கொரோனா நம் வாழ்க்கையை சீர்குலைக்க விடக்கூடாது, கொரோனா என்பது நாம் சமாளிக்க வேண்டிய ஒரு உண்மை என்பதை மறுக்க முடியாது என்றும் அவர் கூறினார்.