Tamilசெய்திகள்

அமெரிக்காவில் பயணிகள் மாஸ்க் அணிய மறுப்பு – பயணத்தை ரத்து செய்த விமான நிறுவனம்

அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் இருந்து பாகமாஸ் மாகாணத்துக்கு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று செல்ல திட்டமிடப்பட்டு இருந்தது.
முககவசம் அணியவில்லை அதில் பயணம் செய்ய பயணிகள் பலர் டிக்கெட் முன்பதிவு செய்து இருந்தனர். இந்த நிலையில் விமானம் கிளம்ப தயாரானது. பயணிகள் ஒவ்வொருவராக விமானத்தில் ஏற தொடங்கினார்கள்.

அப்போது 17, 18 வயதுக்கு உட்பட்ட சில இளைஞர்கள் குழுவாக அந்த விமானத்தில் ஏறினார்கள். அவர்கள் யாரும் முககவசம் அணியவில்லை. விமான பணிப்பெண்கள் அவர்களை முககவசம் அணியுமாறு கூறினார்கள். ஆனாலும் அவர்கள் அதை கண்டுகொள்ளவில்லை.

விமான நிறுவனத்தின் விதிமுறைகளின்படி பயணிகள் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்று அந்த இளைஞர்களிடம் விமான நிறுவன ஊழியர்கள் சக பயணிகள் என அனைவருமே வற்புறுத்தினார்கள். ஆனாலும் அவர்கள்  முககவசம் அணிய மறுத்துவிட்டனர். இதன்காரணமாக மற்ற பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு விமான நிறுவனம் அந்த விமானத்தின் பயணத்தை ரத்து செய்தது. அதன்பிறகு மற்ற பயணிகளை ஒரு விமானத்திலும், முக கவசம் அணிய மறுத்த பயணிகளை வேறு விமானத்திலும் அழைத்து செல்ல திட்டமிட்டது.

மற்ற பயணிகளுக்கு உடனடியாக ஒரு விமானத்தை ஏற்பாடு செய்து அவர்களை விமான நிறுவனம் அதில் அனுப்பி வைத்தது. முககவசம் அணிய மறுத்த இளைஞர்களுக்கு மறுநாள் தான் விமானம் இருக்கிறது என்று கூறி அவர்களை ஓட்டலில் தங்க வைக்க ஏற்பாடு செய்தது. ஆனால் அந்த பயணிகளில் பலருக்கு 17  வயதே ஆவதால் அவர்கள் தங்க ஓட்டல் விதிமுறைகள் இடம் கொடுக்கவில்லை. இதன் காரணமாக அவர்கள் வேறு வழி இல்லாமல் விமான நிலையத்திலேயே இரவில் பொழுதை கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர் மறுநாள் வேறு விமானத்தில் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.