அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிட தயங்கும் மன்மோகன் சிங்!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் தொகுதியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் போட்டியிட வேண்டும் என்று பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். மன்மோகன் சிங் போட்டியிட்டால் சீக்கிய மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்றும் கூறினர். ஆனால், மன்மோகன் சிங், சாதகமான பதிலை கூறவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. போட்டியிட அவர் தயங்குவதாக கூறப்படுகிறது.

மன்மோகன் சிங்கை அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிட வைக்க முயற்சிப்பது இது முதல் முறையல்ல. 2009-ம் ஆண்டு தேர்தலின் போதும் இதே போன்று கோரிக்கை வைத்த போது, தனது உடல்நிலையை காரணம் காட்டி மன்மோகன் சிங் அதனை மறுத்து விட்டார்.

1991-ம் ஆண்டு முதல் அசாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகியுள்ள மன்மோகன் சிங்கின் பதவிக் காலம் வரும் ஜூன் 14ம் தேதியுடன் நிறைவடைகிறது. மக்களவைத் தேர்தல்களில் மன்மோகன் சிங் இதுவரை வெற்றி பெற்றது இல்லை. 1999 ம் ஆண்டு நடந்த தேர்தலில் தெற்கு டெல்லி தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட அவர் பா.ஜனதாவின் மல்கோத்ராவிடம் தோல்வி அடைந்தார். தற்போது, அசாமில் காங்கிரசுக்கு போதிய பலம் இல்லாததால் மன்மோகன் சிங் மீண்டும் தேர்வு செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools