Tamilசெய்திகள்

அமலாக்கத்துறையை கண்டித்து காங்கிரஸ் எம்.பி-க்கள் டெல்லியில் ஆர்பாட்டம்

நாட்டின் முதல் பிரதமர் நேருவால் சுதந்திரத்திற்கு முன்பு நிறுவப்பட்ட பத்திரிகை நேஷனல் ஹெரால்டு ஆகும். இந்த பத்திரிகையை மேம்படுத்த காங்கிரஸ் கட்சி ரூ.90 கோடி வட்டியில்லா கடன் வழங்கியது. அந்த கடனை திருப்பி செலுத்த முடியாததால் அதன் பதிப்பு நிறுவனமான அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், அவரது மகன் ராகுல் காந்தியும் இயக்குனர்களாக கொண்ட ‘யங் இந்தியா’ நிறுவனம் கையகப்படுத்தியது.

இதன் மூலம் அசோசியேட்டட் நிறுவனத்தின் ரூ.2 ஆயிரம் கோடி சொத்துக்களை யங் இந்தியா அபகரித்து விட்டதாக சுப்பிரமணிய சாமி வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பான சட்டவிரோத பண பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்திக்கு கடந்த 5-ந்தேதியும், சோனியா காந்திக்கு 8-ந்தேதியும் நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ராகுல் காந்தி வெளிநாட்டில் இருந்ததால் அவகாசம் கேட்டார். இதனால் அவர் நாளை (13-ந்தேதி) ஆஜராக புதிய சம்மன் அனுப்பப்பட்டது. சோனியா காந்தி கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் அவகாசம் கேட்டார். அவர் 23-ந்தேதி ஆஜராக புதிய சம்மன் அனுப்பப்பட்டது.

இந்த நிலையில் நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல்காந்தியிடம் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு எம்.பி.க்கள் நாளை தர்ணா போராட்டம் நடத்துகிறார்கள்.

இதற்காக எம்.பி.க்கள் அனைவரும் டெல்லிக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் நாடு முழுவதும் காங்கிரசார் அமலாக்கத்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடக்கிறது. முக்கிய நகரங்களில் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள் அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.