Tamilவிளையாட்டு

அதிவேகமாக பந்து வீசுவதில் பும்ராவின் சாதனையை முறியடித்த உம்ரான் மாலிக்

மும்பையில் நடந்த முடிந்த இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்த ஆண்டை வெற்றிகரமாக இந்திய அணி தொடங்கி உள்ளது.

இந்த போட்டியில் அறிமுகமான சிவம் மாவி, நான்கு ஓவர்கள் வீசி 22 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து, நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த போட்டியில் உம்ரான் மாலிக் அதிவேகமாக பந்து வீசி பும்ராவின் சாதனையை முறியடித்துள்ளார்.

உம்ரான் மாலிக் தனது நான்கு ஓவர்களில் 27 ரன்களை விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் மணிக்கு 155 கிமீ வேகத்தில் பந்து வீசினார். இது போட்டியின் வேகமான பந்தாகவும் இருந்தது. 27 பந்துகளில் 45 ரன்கள் எடுத்திருந்த ஷனகாவை உம்ரான் இந்த பந்தின் மூலம் வெளியேற்றினார்.

இந்திய வேகப்பந்து வீச்சாளர்களில் அதிவேகமாக பந்து வீசிய ஜஸ்பிரித் பும்ராவின் சாதனையை இவர் தற்போது முறியடித்தார். இதுவரை பதிவு செய்யப்பட்ட பும்ராவின் அதிகபட்ச வேகம் மணிக்கு 153.36 கி.மீ. அடுத்த இடங்களில் ஷமி (153.3 கிமீ), நவ்தீப் சைனி (152.85 கிமீ) ஆகியோர் உள்ளனர்.