Tamilசெய்திகள்

அதிமுக-வை வழி நடத்த 11 பேர் கொண்ட குழு அமைப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவில் சார்பில் முதல்வர் வேட்பாளராக யார் முன்னிறுத்தப்படுவார்? என்பது தொடர்பாக கடந்த சில தினங்களாக அக்கட்சி தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே அதிகாரப் போட்டி தலைதூக்கியது. செயற்குழு கூட்டத்திலும் இது எதிரொலித்தது. கட்சியை வழிநடத்த 11 பேர் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

செயற்குழு கூட்டத்திற்கு பிறகு பேட்டி அளித்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி அக்டோபர் 7ம் தேதி (இன்று) முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று கூறினார்.

செயற்குழு கூட்டத்திற்கு பின்னர் இந்த விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியது. கடந்த சில தினங்களாகவே முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தங்களின் ஆதரவு நிர்வாகிகள், மூத்த அமைச்சர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தினர். இன்று காலையிலும் ஆலோசனை நீடித்தது.

இந்நிலையில் காலை 10 மணியளவில் அதிமுக தலைமையகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், கட்சியை வழிநடத்த 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை அறிவித்தார். அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், காமராஜ், ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன், முன்னாள் அமைச்சர் மோகன், கோபாலகிருஷ்ணன், மாணிக்கம் ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

பின்னர் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், அதிமுக முதல்வர் வேட்பாளராக தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடுவார் என அறிவித்தார்.