Tamilசெய்திகள்

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கு – இன்று பிற்பகல் விசாரணைக்கு வருகிறது

அ.தி.மு.க. உள்கட்சி தேர்தலை எதிர்த்து கட்சி உறுப்பினர்கள் ராம்குமார் ஆதித்தன் மற்றும் சுரேன் பழனிச்சாமி ஆகியோர் தொடர்ந்த வழக்குகள் சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், கட்சி விதிகளில் திருத்தம் செய்ய தடை விதிக்க வேண்டும் எனவும் இருவர் சார்பிலும் இடைக்கால மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதேபோல தணிகாச்சலம் என்பவரும் பொதுக்குழுவுக்கு தடை கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்குகள் அனைத்தும், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்தன.

பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் என்பவர் சார்பில் பொதுக்குழுவுக்கு தடை கோரி வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும், அவ்வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் மூத்த வக்கீல் ஜி.ராஜகோபால் முறையீடு செய்தார். அப்போது அவர், தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு 5 ஆண்டுகள் பதவிக்காலம் உள்ள நிலையில், எந்த செயல் திட்டத்தையும் அறிவிக்காமல் பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து, விசாரணைக்கு பட்டியலிடப்பட்ட வழக்குகளுடன் சேர்த்து அனைத்து வழக்குகளும் பிற்பகல் 3 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தெரிவித்தார்.