Tamilசெய்திகள்

அண்ணா உயிரியல் பூங்காவுக்கு வரும் பெரியவர்கள், சிறியவர்களுக்கு தகுந்த வசதியை நிர்வாகம் செய்ய வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

தலைமை செயலகத்தில் தமிழ்நாடு உயிரியல் பூங்கா ஆணையத்தின் 21-வது ஆட்சிமன்ற குழு கூட்டம் நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, இந்தியாவிலேயே முதல் இடத்தைப் பிடித்துள்ளது என்பதை இங்கே குறிப்பிடுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். கொரோனா நோய்த்தொற்று ஊரடங்கு காலங்களில், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மூடப்பட்டதால் பூங்காவிற்கு வருமானம் இல்லாதபோது, உயிரியல் பூங்காவின் பராமரிப்பிற்காக அரசாங்கம் ரூ.6 கோடியை ஒதுக்கியது. உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளைக் கொரோனா தொற்று நோயில் இருந்து பாதுகாக்க அரசாங்கம் எடுத்த இந்த முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் பரவலாகப் பாராட்டப்பட்டன.

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, உலகத்தரம் வாய்ந்த சில உயிரியல் பூங்காக்களில் ஒன்று. பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு, முழுமையான இயற்கைச் சூழலில் வாழ்வதற்கு ஏற்றாற்போல் இந்தப் பூங்கா இயற்கையாகவே அமைந்துள்ளது. வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு ஆண்டுக்கு சராசரியாக 20 லட்சம் பார்வையாளர்கள் வந்து செல்கிறார்கள். உயிரியல் பூங்காக்கள், விலங்குகளைப் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு வழங்குவதைத் தவிர, அழிந்து வரும் உயிரினங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதன் மூலம் வனவிலங்குப் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

பூங்காவின் மேம்பாட்டிற்காக பின்வரும் நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்:-

மத்திய உயிரியல் பூங்கா ஆணைய விதிகளின்படி நீண்ட காலத் திட்டம் ஒன்றை தயாரிக்க வேண்டும். உயிரியல் பூங்காக்களில் உள்ள விலங்குகளுக்கு ஆரோக்கியமான, பாதுகாப்பான, சுகாதாரமான சூழலை உருவாக்குதல் வேண்டும். தமிழ்நாடு உயிரியல் பூங்கா ஆணையம், தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து அறிவியல் மேலாண்மை நடைமுறைகள், சிறந்த பராமரிப்பு, சுகாதாரம் மற்றும் உலகெங்கிலும் உள்ள சிறந்த நடைமுறைகளைத் தெரிந்து கொள்ளும் வகையில் பரிமாற்றத் திட்டங்களை வகுக்க வேண்டும் என்று நான் பரிந்துரைக்க விரும்புகிறேன்.

உயிரியல் பூங்காக்களுக்கு வரும் பார்வையாளர்களுக்கு ஆரோக்கியமான சூழலை வழங்குவது மட்டுமன்றி, வன உயிரினங்களைப் பாதுகாப்பதன் அவசியம் மற்றும் முக்கியத்துவத்தைப் பற்றியும் அறிந்து கொள்ள இயலும். உயிரியல் பூங்காக்களுக்கு வருகை தரும் வயதானவர்கள், சிறுவர்கள் ஆகியோர்களுக்கு உகந்த வசதிகளை பூங்கா நிர்வாகம் செய்து கொடுக்க வேண்டும். உயிரியல் பூங்காவானது மாற்றுத்திறனாளிகள் நலத்துறையுடன் இணைந்து,

* சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஓய்வு அறைகள்

* மாற்றுத்திறனாளிகளுக்கான வசதியான வாகனங்கள் மற்றும்

* பல்வேறு வகை மாற்றுத்திறனாளிகளுக்காகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட தகவல் சாதனங்கள் ஆகிய வசதிகளை மாற்றுத் திறனாளிகளுக்காக உருவாக்கும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவைத் தவிர, வேலூர் மாவட்டம் அமிர்தியிலும், சேலம் குரும்பப்பட்டியிலும் தமிழ்நாடு அரசு உயிரியல் பூங்காக்களை அமைத்துள்ளது. இந்த உயிரியல் பூங்காக்களில் உள்ள அடிப்படை வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். வனவிலங்குகள் மற்றும் வனஉயிரினப் பூங்காக்களில் உள்ள வனவிலங்குகளைப் பாதுகாப்பதில் நாங்கள் ஆழ்ந்த மன உறுதியோடு இருக்கிறோம். இந்த நடவடிக்கைகளில் தொடர்புடைய அனைவரும் முனைப்பான ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டுக்கொள் கிறேன்.

கூட்டத்தில் அமைச்சர் ராமச்சந்திரன், தலைமை செயலாளர் இறையன்பு, வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹிப் உள்பட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.