Tamilசெய்திகள்

அண்ணாமலை அரசியல் முதிர்ச்சியின்றி பேசி வருகிறார் – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:

அண்ணாமலை அரசியல் முதிர்ச்சியின்றி பேசி வருகிறார். திமுக – பாஜக இடையிலான உறவை ரகசியமாக வைக்க வேண்டாம். வெளிப்படையாக அறிவித்து விடுங்கள். தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றாதீர்கள். மக்களுக்கு அல்வா கொடுக்காதீர்கள். வெள்ள நிவாரணம் கொடுக்க வரவில்லை, ஆறுதல் சொல்ல வரவில்லை, அவர் தமிழ்நாட்டுக்கு வர என்ன தகுதி இருக்கிறது… யோக்கியதை இருக்கிறது என்று எல்லாம் கேட்டது யார்? முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின்.

பாதுகாப்புத்துறை அமைச்சரை அழைத்து வந்து விட்டீர்கள். மக்களின் வளர்ச்சிக்கு ராஜதந்திரத்துடன் பீகாரில் நிதிஷ்குமார் எப்படி நிதி வாங்கினார், ஆந்திராவில் எப்படி நிதி வாங்கினார். அதேபோல் நீட் தேர்வை ரத்து செய்யுங்கள் என ராஜ்நாத் சிங்கிடம் தமிழக அரசு கேட்டிருக்கலாம். அதையெல்லாம் விட்டுவிட்டு எங்க அப்பாவை திமுக-காரன் கூட இப்படி பாராட்ட மாட்டான் என்று ஒரு முதலமைச்சர் சொல்வது எப்படி ஏற்றுக்கொள்வது.

தமிழ்நாட்டின் உரிமையை அடமானம் வைத்து உங்கள் அப்பாவின் பெருமையை புகழ்பாடுவதால் தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன நன்மை கிடைக்கப்போகிறது என்பது தான் மக்களின் கேள்வி என்று கூறினார்.