Tamilசெய்திகள்

அசானி புயலால் சென்னையில் இருந்து புறப்படும் 17 உள்நாட்டு விமானங்கள் ரத்து

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 8-ந் தேதி புயலாக உருவெடுத்தது. அதற்கு ‘அசானி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் இன்று (புதன்கிழமை) பிற்பகலுக்குள் காக்கிநாடா-விசாகப்பட்டினம் இடையே கரையை கடந்து, ஒடிசா நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்போது, ஆந்திர கடலோர பகுதியில் மணிக்கு 95 கி.மீ. வேகம் வரையிலும், ஒடிசா கடலோர பகுதியில் மணிக்கு 65 கி.மீ. வேகம் வரையிலும் பலத்த காற்று வீசும் என்று தெரிகிறது.

இந்தநிலையில், அசானி புயல் காரணமாக  சென்னை விமான நிலையத்தில் 2-வது நாளாக இன்றும் 17 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை விமான நிலையத்தில் இருந்து விசாகப்பட்டினம், விஜயவாடா, ஹைதராபாத், பெங்களூரு, கொல்கத்தா, ஜெய்ப்பூர், ராஜமுந்திரி உள்ளிட்ட இடங்களுக்கு இயக்கப்படும் 17 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. மேலும் சென்னையில் இருந்து அந்தமான் புறப்படும் விமானங்கள் காலதாமதமாக புறப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.