Tamilசெய்திகள்

அக்னிபாத் திட்டத்திற்கு மணீஷ் திவாரி ஆதரவு – காங்கிரஸ் அதிருப்தி

முப்படைகளில் 4 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் வீரர்களை சேர்க்கும் அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்களும், வன்முறையும் வெடித்தன. ஆனாலும் இந்த திட்டத்தை திரும்பப்பெற முடியாது என மத்திய அரசு உறுதியாக தெரிவித்தது. இந்த திட்டத்தின் கீழ் வீரர்களை சேர்க்கும் நடவடிக்கைகளில் முப்படைகளும் ஈடுபட்டுள்ளன.

அக்னிபாத் திட்டத்தன் கீழ் விமானப்படையில் சேர 7.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. வரும் 18ந் தேதி தொடங்க உள்ள பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் அக்னிபாத் திட்ட பிரச்சினையை எழுப்பி அவை நடவடிக்கைகளை முடக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெற பாதுகாப்பு துறைக்கான நாடாளுமன்ற ஆலோசனைக்குழு கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற 12 எம்பிக்கள், 6 பேர் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள், இதில் காங்கிரஸ் சார்பில் கலந்து கொண்ட பங்கேற்ற மணீஷ் திவாரி அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தும் அறிக்கையில் கையெழுத்திட மறுத்துள்ளார்.

முன்னதாக அக்னிபாத் திட்டத்தை ஆதரித்து அவர் வெளியிட்டிருந்த டுவிட்டர் பதிவில், எதார்த்தம் என்னவென்றால், இலகுவான ஆர்வமுள்ள இளைஞர்களின் ஆயுதப்படை இந்தியாவுக்குத் தேவை என்றும் குறிப்பிட்டிருந்தார். அக்னிபாத் திட்டத்திற்கு சோனியாகாந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர்.

இந்நிலையில் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மணீஷ் திவாரி வெளிப்படையாக அந்த திட்டத்தை ஆதரித்து இருப்பது காங்கிரஸ் தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மணீஷ் திவாரியை காங்கிரசில் இருந்து சஸ்பெண்ட் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.