Tamilசெய்திகள்

அகில இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் கடிதம் வெளியானது – அரியர் மாணவர்கள் அப்செட்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் மாணவர்களை திரட்டி தேர்வு எழுதுவது கடினமானது என்பதால், பள்ளி மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல, கல்லூரி இறுதி செமஸ்டர் எழுதும் மாணவர்களை தவிர்த்து பிற ஆண்டு மாணவர்கள், தேர்வு கட்டணம் செலுத்தினால் தேர்ச்சி என்று தமிழக அரசு அறிவித்தது.

ஆனால், அகில இந்திய தொழில்நுட்பக் கழகத்திடம் (ஏஐசிடிஇ) இருந்து தனக்கு மின்னஞ்சல் வந்ததாகவும், அதில் அரியர் மாணவர்களுக்கு தேர்வு எழுதிதான் தேர்ச்சி கொடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்திருந்தார். இது மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

அதேவேளையில், ஏஐசிடிஇ அமைப்பிடம் இருந்து கடிதம் எதுவும் வரவில்லை என உயர்கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகன் மறுத்து வந்த நிலையில் ஏஐசிடிஇ கடிதம் வெளியாகியுள்ளது. அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குவதை ஏற்க முடியாது என ஆக.30-ந் தேதி ஏஐசிடிஇ கடிதம் அனுப்பியுள்ளது. உத்தரவை மீறினால் அண்ணா பல்கலை.யின் அங்கீகாரம் பறிக்கப்படும் எனவும் ஏஐசிடிஇ தலைவர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.