Tamilவிளையாட்டு

ரவிசாஸ்திரியை பயிற்சியாளராக நியமித்ததில் விதிமீறல்! – டயானா எடுல்ஜி

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரமேஷ் பவாரின் பதவி காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இந்திய 20 ஓவர் போட்டி பெண்கள் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், துணை கேப்டன் ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டிக்கு இ-மெயில் அனுப்பினர்.
அதே சமயம் 20 ஓவர் உலக கோப்பை தொடரின் அரைஇறுதியில் தன்னை வேண்டுமென்றே ரமேஷ் பவார் ஓரங்கட்டியதாகவும், பலமுறை அவர் தன்னை அவமதித்ததாகவும் மூத்த வீராங்கனை மிதாலிராஜ் பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறினார்.

ரமேஷ் பவார் சர்ச்சையில் சிக்கியதால் அதிருப்திக்குள்ளான இந்திய கிரிக்கெட் வாரியம் அவரது ஒப்பந்தத்தை நீட்டிக்கவில்லை. இதையடுத்து புதிய பயிற்சியாளருக்கான தேடுதல் வேட்டையை கிரிக்கெட் வாரியம் தொடங்கியுள்ளது. கிப்ஸ், மனோஜ் பிரபாகர், ஓவைஸ்ஷா உள்ளிட்டோர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர். ரமேஷ் பவாரும் மறுபடியும் விண்ணப்பம் அனுப்பியுள்ளார். இவர்களிடம் கபில்தேவ் தலைமையிலான இடைக்கால கமிட்டி வருகிற 20-ந்தேதி நேர்காணல் நடத்தி புதிய பயிற்சியாளரை தேர்வு செய்யும்.

இதற்கிடையே இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஒரு நியாயம், பெண்கள் அணியின் கேப்டனுக்கு ஒரு நியாயமா? என்று இந்திய கிரிக்கெட் வாரியத்தை நிர்வகிக்கும் நிர்வாக கமிட்டி உறுப்பினர்களில் ஒருவரான முன்னாள் கேப்டன் டயானா எடுல்ஜி கோபத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார். ஆண்கள் அணிக்கான முந்தைய பயிற்சியாளர் கும்பிளேவுக்கும், விராட் கோலிக்கும் இடையே கடந்த ஆண்டு மோதல் ஏற்பட்ட போது நடந்த விஷயங்களை இப்போது கசியவிட்டுள்ளார்.

இது தொடர்பாக டயானா எடுல்ஜி கூறியதாவது:

கும்பிளேவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட பிறகு அவரை நீக்கிவிட்டு புதிய பயிற்சியாளரை நியமிப்பது தொடர்பாக கோலி, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரிக்கு அடிக்கடி குறுஞ்செய்தி அனுப்பிய வண்ணம் இருந்தார். கும்பிளேவின் ஒப்பந்த காலம் முடிவடைந்த பிறகு அவரையே தொடர்ந்து பயிற்சியாளர் பொறுப்பில் நீடிக்க செய்ய தெண்டுல்கர், கங்குலி, லட்சுமண் ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி விரும்பியது. ஆனால், கோலியிடம் கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. ரவிசாஸ்திரி பயிற்சியாளராக வர வேண்டும் என்பதே கோலியின் ஆசை. காலக்கெடுவுக்குள் ரவிசாஸ்திரி பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கவில்லை. அவருக்காக காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. இது முற்றிலும் விதிமீறல் என்று அப்போது எனது எதிர்ப்பை பதிவு செய்தேன். கும்பிளே ஒரு ஜாம்பவான். இந்த விவகாரத்தில் அவர் அவமதிக்கப்பட்டார். வில்லன் போல் அவரை சித்தரித்தனர். ஆனாலும் பெருந்தன்மையுடன் எதை பற்றியும் பேசாமல் அவர் ராஜினாமா செய்தார். எது எப்படி என்றாலும் ரவிசாஸ்திரி நியமனத்தில் விதிமுறைகள் மீறப்பட்டன என்பதே உண்மை.

கும்பிளே வேண்டாம் என்று கோலி கூறிய போது செவி சாய்த்தீர்கள். இதே போல் பெண்கள் அணியின் கேப்டனும், துணை கேப்டனும் பயிற்சியாளராக ரமேஷ் பவார் நீடிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அதற்கு ஏன் அனுமதி வழங்கக்கூடாது. அணியின் முக்கிய வீராங்கனைகளான அவர்களின் கருத்தை நாம் புறக்கணிக்க கூடாது. பயிற்சியாளர் குறித்து அவர்கள் இ-மெயில் அனுப்பியதில் எந்த தவறும் இல்லை. அணியின் நலனுக்காக வெளிப்படை தன்மையுடன் உண்மையாக அவர்கள் இருக்கிறார்கள். ஆனால் கோலி அப்படி அல்ல. கும்பிளேவை நீக்கும்படி, தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரிக்கு தொடர்ச்சியாக தகவல்கள் அனுப்பி மறைமுக நெருக்கடி கொடுத்தார்.

இவ்வாறு கூறியுள்ள எடுல்ஜி, ரமேஷ் பவாருக்கு ஆதரவாக கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி தலைவர் வினோத் ராய்க்கு இ-மெயிலும் அனுப்பியுள்ளார். பயிற்சியாளரை வீராங்கனைகளின் ஆதரவின் அடிப்படையில் தேர்வு செய்ய முடியாது என்று ஏற்கனவே கைவிரித்து விட்ட வினோத் ராய், கும்பிளேவுக்கும், கோலிக்கும் கருத்து வேறுபாடு இருந்தது உண்மை. அதன் தொடர்ச்சியாகவே அவர் விலகினார் என்றும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *