Tamilவிளையாட்டு

ரசிகருடன் ஓடி பிடித்து விளையாடிய டோனி!

ஐபிஎல் போட்டிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் நேற்று இரவு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டனர். இதில், கேப்டன் டோனி மற்றும் வீரர்கள் பங்கேற்றனர். அப்போது ஒரு ரசிகர், திடீரென தடுப்புச் சுவரைத் தாண்டி மைதானத்திற்குள் நுழைந்து, கேப்டன் டோனியை நோக்கி ஓடி வந்தார். டோனியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கவோ அல்லது அவரை கட்டிப்பிடித்து வாழ்த்து பெறவோ அவர் வந்திருக்கலாம்.

ஆனால், டோனி அவரிடம் பிடிபடாமல், ‘முடிந்தால் பிடித்துப் பார்’ என போக்கு காட்டி ஓடினார். சிறிது நேரம் அந்த ரசிகரிடம் பிடிபடாமல் சென்றார் டோனி. அதற்குள் பாதுகாவலர் ஓடி வந்து, அந்த ரசிகரைப் பிடித்துக்கொண்டார். பின்னர் அந்த ரசிகருக்கு டோனி கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். இந்த சம்பவத்தின் வீடியோ பதிவை சிஎஸ்கே வெளியிட்டுள்ளது. இந்தவீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

மைதானத்தில் ரசிகருக்கு பிடி கொடுக்காமல் டோனி ஓடிப்பிடித்து விளையாடுவது இது முதல் முறையல்ல. சமீபத்தில் நாக்பூரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியின்போதும், மைதானத்திற்குள் நுழைந்த ரசிகரிடம் சிக்காமல் டோனி ஓடிப்பிடித்து விளையாடினார். சிறிது தூரம் ரசிகரை துரத்தவிட்டு ஓடிய டோனி, ஸ்டம்ப் அருகே நின்றார். டோனி நின்றதும் அவரை கட்டி அணைத்த ரசிகர், டோனியின் காலில் விழுந்துவிட்டு, கை குலுக்கி திரும்பினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *