Tamilசெய்திகள்

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு இன்று பிறந்தநாள்!

மத்தியப்பிரதேசத்தில் உள்ள குவாலியர் நகரில் 25-12-1924 அன்று பிறந்த அடல் பிஹாரி வாஜ்பாய், வெள்ளையர் ஆட்சியை எதிர்த்து, இந்திய விடுதலைப் போரில் ஈடுபட்டதற்காக 1942-ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். அன்றுமுதல் தீவிரமாக தன்னை பொதுசேவையில் ஈடுபடுத்திக் கொண்ட அவர், 1957-ம் ஆண்டு பல்ராம்பூர் தொகுதியில் இருந்து முதன்முதலாக பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, எம்.பி. ஆனார்.

அவரது பேச்சாற்றலை கண்டு வியப்படைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, ‘என்றாவது ஒரு நாள் வாஜ்பாய் இந்தியாவின் பிரதமராக வருவார்’ என தெரிவித்ததாக கூறப்படுகிறது. 1970-ம் ஆண்டு இந்தியாவில் நெருக்கடி நிலை சட்டம் (மிசா) பிரகடனப்படுத்தப்பட்டபோது, அதனை எதிர்த்துப் போராடி, கைதாகி, சிறைச் சென்ற முக்கிய அரசியல் தலைவர்களில் வாஜ்பாயும் ஒருவர் ஆவார்.

பின்னர், பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக உயர்ந்த வாஜ்பாயின் பெயர் சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அரசியலோடு ஒன்றிணைந்த பெயராகவே மாறிப்போய் விட்டது. அவரது சேவையை கவுரவிக்கும் வகையில் இந்திய அரசு 1992-ம் ஆண்டில் பத்மவிபூஷன் விருதினை வழங்கி சிறப்பித்திருந்தது.

திருமணமே செய்து கொள்ளாமல் முழுநேர அரசியல்வாதியாக வாழ்ந்த அவர், இந்தியாவின் 10-வது பிரதமராக 16-5-1996 அன்று பதவி ஏற்றார். எனினும், பாராளுமன்றத்தில் போதுமான எம்.பி.க்களின் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாமல் போனதை தொடர்ந்து 13 நாட்களிலேயே அவர் பதவி விலக நேர்ந்தது.

பின்னர், 1998-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியதையடுத்து, இரண்டாவது முறையும் பிரதமராக அவர் பதவி ஏற்றார். தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் ஏற்பட்ட கருத்து மற்றும் கொள்கை முரண்பாடுகளின் விளைவாக இந்த முறையும் 13 மாதங்கள் மட்டுமே பிரதமராக அவர் பதவி வகிக்க முடிந்தது.

அதன் பிறகு, அடுத்த ஓராண்டுக்குள் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு 1999-ல் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 303 எம்.பி.க்.களுடன் பா.ஜ.க. அபார வெற்றி பெற்றது. இதனையொட்டி, 13-10-1999 அன்று மூன்றாவது முறையாக அவர் இந்தியாவின் பிரதமர் ஆனார்.

இம்முறை, முழுமையாக ஐந்தாண்டுகாலம் தனது பதவியை நிறைவுசெய்த வாஜ்பாய், பொக்ரான் அணுகுண்டு சோதனை, கார்கில் போர் ஆகியவற்றை வெற்றிகரமாக நடத்தி பாகிஸ்தானின் மூக்கை உடைத்தார். இதன் மூலம் இந்தியாவின் ஆற்றலையும், பெருமையையும் உலக நாடுகளுக்கு உணர்த்தினார்.

தங்க நாற்கர விரைவு நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் வாயிலாக இந்தியாவின் உள்கட்டமைப்பையும் அவர் மேம்படுத்தினார்.

தேர்ந்த அரசியல்வாதி, சிறந்த நிர்வாகி என புகழப்படும் வாஜ்பாய் கவிதைகள் எழுதும் கலையிலும் கைதேர்ந்து விளங்கினார்.

2004-ம் ஆண்டு தனது ஐந்தாண்டுகால பதவியை நிறைவு செய்த வாஜ்பாய், அரசியலில் இருந்து விலகுவதாக 2005-ல் அறிவித்தார். உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் பூரண ஓய்வில் இருந்த அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு 2015-ம் ஆண்டு நாட்டிலேயே மிகவும் உயரியதான ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்பட்டது.

மரபுகளை எல்லாம் கடந்த வகையில் அந்நாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வாஜ்பாயின் இல்லம் தேடிச்சென்று சிறப்புக்குரிய இந்த விருதினை அவருக்கு வழங்கினார்.

அடல் பிஹாரி வாஜ்பாய்(94) கடந்த 16-8-2018 அன்று உடல்நலக்குறைவால் டெல்லியில் காலமானார். முழு அரசு மரியாதையுடன் நடைபெற்ற இறுதி ஊர்வலத்துக்கு பின்னர் ராஷ்டரிய ஸ்மிரிதி ஸ்தல் திடலில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

டெல்லியில் எரியூட்டப்பட்ட வாஜ்பாயின் அஸ்தி விமானம் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு முக்கிய ஆறுகளில் கரைக்கப்பட்டது.

அவரது 94-வது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் வாஜ்பாயின் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று வெளியிட்டு அவரது புகழுக்கு இந்திய அரசின் சார்பில் மணிமகுடம் சூட்டினார்.

இந்நிலையில், வாஜ்பாயின் பிறந்தநாளான இன்று அமரர் வாஜ்பாய் தொடர்பான நினைவுகளையும் அவரது தனிச்சிறப்புகளையும் குறிப்பிட்டு பல்வேறு அரசியல் பிரமுகர்கள் சமூக வலைத்தளங்களில் புகழாரம் சூட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *