Tamilவிளையாட்டு

மராட்டிய ஓபன் டென்னிஸ் – ரோகன் போபண்ணா ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்

மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டி புமர்னே நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று ஒற்றையர் பிரிவில் கால்இறுதி ஆட்டங்கள் நடந்தன. ஒரு ஆட்டத்தில் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள தென்ஆப்பிரிக்க வீரர் கெவின் ஆண்டர்சன் 6-3, 6-3 என்ற நேர் செட்டில் ஸ்பெயினின் ஜாமி முனாரை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறினார். பெல்ஜியம் வீரர் ஸ்டீவ் டார்சிஸ் 7-5, 6-2 என்ற நேர் செட்டில் மாலெக் ஜாஸிரியை (துனிசியா) விரட்டியடித்தார். குரோஷிய வீரர் இவோ கார்லோவிச் தன்னை எதிர்த்த எர்னஸ்ட்ஸ் குல்பிசை (லாத்வியா) 7-6 (5), 7-6 (5) என்ற நேர் செட்டில் தோற்கடித்தார்.

முன்னதாக நேற்று முன்தினம் இரவு நடந்த ஒற்றையர் 2-வது சுற்றில் இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த ராம்குமார் 7-6 (6) 6-7 (5), 3-6 என்ற செட் கணக்கில் துனிசியாவின் ஜாஸிரியிடம் வீழ்ந்தார். இத்துடன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.

அதே சமயம் இரட்டையர் பிரிவின் கால்இறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா -திவிஜ் சரண் ஜோடி 6-7 (4-7), 6-4, 17-15 என்ற செட் கணக்கில் லியாண்டர் பெயஸ் (இந்தியா), மிக்யூல் ஏஞ்சல் ரியேஸ் (மெக்சியா) இணையை வெளியேற்றி அரைஇறுதிக்கு தகுதி பெற்றது. 6 முறை ‘மேட்ச் பாயிண்ட்’ ஆபத்தில் இருந்து தப்பித்த போபண்ணா கூட்டணி இந்த வெற்றியை பெற 1 மணி 45 நிமிடங்கள் போராட வேண்டி இருந்தது. ‘இது போன்ற மிகவும் நெருக்கமான போட்டியை ஒரு போதும் விளையாடியதில்லை’ என்று வெற்றிக்கு பிறகு போபண்ணா கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *