Tamilசினிமா

பிரபாஸ் ரசிகர்களை கோபப்படுத்திய ஷ்ரத்தா கபூர்

பாகுபலியின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு பிரபாஸ் நடிப்பில் உருவான படம் ‘சாஹோ’. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய்க்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் கடுமையான எதிர்மறை விமர்சனங்களைச் சந்தித்தது. இருப்பினும் படத்தின் வசூல் நன்றாகவே இருந்ததாக தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

‘சாஹோ’ படத்தில் நாயகியாக நடித்தவர் ஷ்ரத்தா கபூர். தென்னிந்திய சினிமாவில் இவருக்கு முதல் படம் இது. படம் சரியான வரவேற்பைப் பெறாத காரணத்தால் ஷ்ரத்தா கபூர் நினைத்த வெற்றியை முதல் படத்தில் பெற முடியவில்லை. இருந்த போதும், ‘சாஹோ’ வெளியான ஒரே வாரத்தில் ‘சிச்சோரி’ என்ற படம் இந்தியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ஷ்ரத்தாவுக்கு ஆறுதல் தந்தது.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஷ்ரத்தா கபூர் பங்கேற்றார். பல நூறு பார்வையாளர்கள் மத்தியில் மேடையில் அவரிடம் சில கேள்விகளை நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கேட்டார். ஆனால் ‘சாஹோ’ பற்றிய கேள்விகளுக்கு மட்டும் ஷ்ரத்தா பதில் அளிக்காமல் பேச்சை மாற்றிக்கொண்டே இருந்தார். அடுத்தடுத்து மூன்று நான்கு கேள்விகள் ‘சாஹோ’ பற்றி கேட்டும் ஷ்ரத்தா சம்பந்தமே இல்லாமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.

ஒரு கட்டத்தில் ஷ்ரத்தாவே, “சாஹோவா? நான் பார்வையாளர்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா? நீங்கள் அனைவரும் சிச்சோரி பார்த்தீர்களா?” என்று அங்கு கூடியிருந்தவர்களைப் பார்த்துக் கேட்டார். ஷ்ரத்தாவின் இந்த செயல் பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. குறிப்பாக பிரபாஸ் ரசிகர்களை கோபப்படுத்தியுள்ளது. அதில் சிலர் ஷ்ரத்தாவை விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *