Tamilவிளையாட்டு

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி20 – 222 ரன்கள் சேசிங் செய்து இங்கிலாந்து வெற்றி

தென்ஆப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி நேற்றுசெஞ்சூரியனில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பேட்டிங்கை தேர்வு செய்தது.

தென்ஆப்பிரிக்கா அணியின் பவுமா, டி காக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அணியின் ஸ்கோர் 7.4 ஓவரில் 84 ரன்கள் எடுத்திருக்கும்போது டி காக் 24 பந்தில் 35 ரன்கள் சேர்த்தார். பவுமா 24 பந்தில் 49 ரன்கள் சேர்த்தார்.

அதன்பின் வந்த கிளாசன் 33 பந்தில் 66 ரன்களும், டேவிட் மில்லர் 20 பந்தில் 35 ரன்களும் அடிக்க தென்ஆப்பிரிக்கா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் குவித்தது.

பின்னர் 223 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது. ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜேசன் ராய் 7 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து பட்லர் உடன் பேர்ஸ்டோவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி தென்ஆப்பிரிக்காவின் பந்து வீச்சை துவம்சம் செய்தது. பட்லர் 29 பந்தில் 57 ரன்களும், பேர்ஸ்டோவ் 34 பந்தில் 64 ரன்களும் குவித்தனர்.

கேப்டன் இயன் மோர்கன் ஆட்டமிழக்காமல் 22 பந்தில் 7 சிக்சர்களுடன் 57 ரன்கள் விளாச இங்கிலாந்து 19.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இங்கிலாந்து 2-1 எனக் கைப்பற்றியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *