Tamilசெய்திகள்

தமிழக சட்டசபையின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது

தமிழகத்தை உலுக்கி உள்ள தேர்வு முறைகேடு, குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் என பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.

சட்டசபை கூடியதும் துணை முதல்-அமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் 2020-2021-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்யும் 10-வது பட்ஜெட் இதுவாகும்.

பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்பாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சேப்பாக்கம் ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபட்டார். அதன்பின்னர், தலைமைச் செயலகத்திற்கு வந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு முன்பாக அ.தி.மு.க. அரசு தாக்கல் செய்யும் கடைசி முழு பட்ஜெட் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. மக்களை கவரும் வகையில், துறை சார்ந்த புதிய அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு சட்டசபைபையின் அலுவல் ஆய்வு குழு கூடி பட்ஜெட் மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்று முடிவு செய்யும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *