Tamilசினிமா

ஜோதிகா படப்பிடிப்பில் திடீர் விசிட் அடித்த சூர்யா!

சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பின் சுமார் 6 வருடங்கள், படங்களில் நடிக்காமல் இருந்த ஜோதிகா மீண்டும் ‘36 வயதினிலே’ படம் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். அடுத்து ‘மகளிர் மட்டும்’, ’நாச்சியார்’, ’செக்கச்சிவந்த வானம்’ என்று தொடர்ச்சியாக நடித்து வந்த ஜோதிகா இந்த ஒரு வருடத்தில் மட்டும் இதுவரை மூன்று படங்களில் நடித்து முடித்துவிட்டார். அரசுப் பள்ளி ஆசிரியையாக அவர் நடித்திருந்த ‘ராட்சசி’, ஆக்‌ஷன் நாயகியாக நடித்திருந்த ‘ஜாக்பாட்’ போன்ற படங்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இதையடுத்து, அவர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் ‘பொன்மகள் வந்தாள்’ படத்தில் நடித்து வருகிறார். ஜெ.ஜெ.பெட்ரிக் இயக்கும் இப்படத்திற்கு 96 பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், படப்பிடிப்பு தளத்திற்கு திடீர் விசிட் அடித்த சூர்யா, படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இதையடுத்து படக்குழுவினர் அவரோடு செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இப்புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *