Tamilசெய்திகள்

சிவில் சர்வீஸ் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு! – தமிழகத்தில் 40 ஆயிரம் பேர் தேர்வு எழுதினார்கள்

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட 26 மத்திய அரசு பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வுகளை அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. இந்த நிலையில் சிவில் சர்வீசஸ் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு நாடு முழுவதும் 72 நகரங்களில் நேற்று நடைபெற்றது. நாடு முழுவதும் 7 லட்சத்துக்கு மேற்பட்டோரும், தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை மற்றும் வேலூரில் அமைக்கப்பட்டிருந்த மையங்களில் 40 ஆயிரத்துக்கு மேற்பட்டோரும் நேற்று தேர்வு எழுதினர்.

சிவில் சர்வீசஸ் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு 2 தாள்களாக பிரித்து நடத்தப்பட்டது. காலையில் பொது அறிவியல் தொடர்பான தேர்வும், பிற்பகலில் திறனறிவு தொடர்பான தேர்வும் நடைபெற்றது. காலை 9.30 மணிக்கு சிவில் சர்வீசஸ் பணிகளுக்கான முதல் தாள் தேர்வும், மதியம் 2.30 மணிக்கு 2-ம் தாள் தேர்வும் நடந்தது. தேர்வு தொடங்கும் நேரத்துக்கு 10 நிமிடங்களுக்கு முன்னரே தேர்வு எழுதுபவர்கள் மையத்துக்குள் இருக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டதால் தேர்வு எழுதும் அனைவரும் முன்னரே தேர்வு அறைக்கு சென்றனர்.

தேர்வு எழுதுபவர்களிடம் செல்போன், பேஜர், புளூடூத், பென்டிரைவ், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உள்ளதா? என்று சோதனை செய்தபின் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளிகளுக்கு மையங்களுக்குள் செல்வதற்கு சிறப்பு ஏற்பாடாக சக்கர நாற்காலிகள் வைக்கப்பட்டிருந்தன. மாற்றுத்திறனாளிகளுக்காக தேர்வு எழுத உதவ வரும் எழுத்தரும் சோதனைக்கு பின்னரே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

முதல் தாளான பொது அறிவில், விடுதலை போராட்டம், முகலாய ஆட்சி காலங்கள், நில சீர்திருத்தம் உள்ளிட்டவைகளில் இருந்தும், அரசு திட்டங்கள் மற்றும் சுற்றுச்சூழல் குறித்தும் கேள்விகள் அதிக அளவில் இடம்பிடித்தன. இதனால் இந்த வினாத்தாளில் உள்ள பல கேள்விகள் மிக கடினமாக இருந்ததாக பலர் தெரிவித்தனர்.

இந்த நிலையில் தேர்வு குறித்து சைதை துரைசாமியின் மனிதநேயம் ஐ.ஏ.எஸ். அகாடமியில் பயின்ற ஆர்.நஸ்ரீன் பானு கூறியதாவது:-

சிவில் சர்வீஸ் தேர்வில் முதல் தாளான பொது அறிவியலில் இந்த முறை பல சிக்கலான கேள்விகள் இடம்பெற்றன. அதில் குறிப்பாக பல கேள்விகள் ரிசர்வ் வங்கி குறித்து கேட்கப்பட்டிருந்தன. மேலும் இந்திய ஆட்சி அமைப்பு குறித்த கேள்விகளும், பொருளாதாரம் குறித்த கேள்விகளும் மிக சவாலாக அமைந்தது.

இந்திய ஆட்சி அமைப்பில் செய்த திருத்தங்களுடன் தற்போதைய நிகழ்வுடன் ஒப்பிட்டு அதிக கேள்விகள் இருந்தன. பல கேள்விகளுக்கு கொடுக்கப்பட்ட பதில்கள் குழப்பமாக இருந்தது. அதில் சரியான விடையை தேர்ந்தெடுக்க சிறிது கடினமாக இருந்தது. மேலும் புவியியலில் ஆறுகள் குறித்தும் கேட்கப்பட்டிருந்தது. சிவில் சர்வீஸ் தேர்வின் 2-ம் தாள் மிக எளிதாக இருந்தது. சைதை துரைசாமியின் மனிதநேயம் ஐ.ஏ.எஸ். அகாடமியில் கடந்த ஒரு வருடமாக பயின்று வருகிறேன். அங்கு தொடர்ந்து சிக்கலான கேள்விகளை எதிர்கொள்ள பயிற்சி அளித்ததால் தேர்வின் முதல் தாள் எனக்கு மிகவும் எளிதாக இருந்தது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

புதுச்சேரியில் இந்த தேர்வினை எழுத 3 ஆயிரத்து 25 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் காலையில் நடந்த தேர்வினை 1,603 பேர் எழுதினார்கள். பிற்பகலில் அதிலும் சிலர் வரவில்லை. 1,597 பேர் மட்டுமே தேர்வினை எழுதினார்கள்.

விண்ணப்பித்தவர்களின் கிட்டத்தட்ட பாதி பேர் இந்த தேர்வுகளை எழுதவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தேர்வின் முடிவுகள் அடுத்த மாதம் வெளியிடப்படும் என்றும், சிவில் சர்வீஸ் பணிக்கான முதன்மை தேர்வானது வரும் செப்டம்பர் மாதம் 20-ந் தேதி தொடங்கி 5 நாட்கள் நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *