Tamilசெய்திகள்

சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டம் அமைக்கப்படுவது வரவேற்கத்தக்கது – ஜி.கே.வாசன் அறிக்கை

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தூத்துக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக சிறப்பான வகையில் சிவந்தி ஆதித்தனாருக்கு பிறந்த மண்ணில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் திறந்து வைப்பது பெருமை சேர்க்கும் வகையில் உள்ளது.

பாமர, ஏழைகள் படிக்கும் வகையில் பத்திரிகை துறையை வழி நடத்தியது, இந்தியாவுக்கே பெருமை சேர்க்கும் வகையில் விளையாட்டு துறையில் சிறப்பாக பணியாற்றியது, கல்வி, ஆன்மீகம், திருப்பணிகள் தொழில் துறை உள்ளிட்டவைகளில் மிகச்சிறந்த பணியாற்றிய சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் திறப்பதை த.மா.கா. வரவேற்கிறது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த சட்டத்தால் முஸ்லிம்களுக்கு பாதகம் இல்லாமல் இருக்க வேண்டும். அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயம் மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ளது. எனவே அதனை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

நாட்டின் வளர்ச்சியில் இஸ்லாமியர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. அவர்களை தவிர்த்து யாரும் எதையும் செய்துவிட முடியாது. எதிர்க்கட்சிகள் வாக்கு வங்கிக்காக போராட்டம் நடத்த கூடாது. வேளாண் மண்டல அறிவிப்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது. விவசாயிகளின் நலன் சார்ந்த அரசாக அ.தி.மு.க. அரசு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது தெற்கு மாவட்ட தலைவர் விஜய சீலன், மாநில துணைச் செயலாளர் மால்மருகன், மாநில செயலாளர் என்.டி.எஸ்.சார்லஸ், முன்னாள் எம்.பி. ராம்பாபு ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *