Tamilசெய்திகள்

குரூப்-4, குரூப்-2 தேர்வு மோசடி – தலைமறைவாக உள்ள தரகரை பிடிக்க தனிப்படை

குரூப்-4, குரூப்-2ஏ தேர்வு மோசடி வழக்கில் இன்னொரு முக்கிய குற்றவாளியாக இருக்கும் தரகர் ஜெயக்குமார் போலீசில் பிடிபடாமல் தொடர்ந்து தலைமறை வாகவே உள்ளார். அவர் பற்றி தகவல் தருபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்று சி.பி. சி.ஐ.டி. போலீசார் அறிவித்துள்ளனர்.

தலைமறைவாக உள்ள ஜெயக்குமார் தமிழகத்தை விட்டு தப்பிச் சென்று இருக்கலாம் என்றே கருதப்படுகிறது.

இதைத் தொடர்ந்து கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களுக்கும் போலீசார் விரைந்துள்ளனர். அங்கு முகாமிட்டுள்ள தனிப்படை போலீசார் ஜெயக்குமாரை எப்படி யாவது பிடித்து விட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளனர்.

ஜெயக்குமார் பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் அறிவித்துள்ள நிலையிலும் அவரை பற்றி எந்த துப்பும் துலங்காமலேயே இருப்பது குறிப்பிடத்தக்கது.

குரூப்-2ஏ தேர்வில் முறைகேடாக தேர்ச்சி பெற்று சென்னை எழிலகத்தில் பணிபுரிந்து வந்த போலீஸ்காரர் சித்தாண்டியின் மனைவி பிரியாவும் விடு முறை எடுத்துக் கொண்டு தலைமறைவாக உள்ளார். அவரும் சித்தாண்டியும் ஒன்றாகவே தலைமறைவாகி விட்டதாக கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில் சித்தாண்டி மட்டும் நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீசிடம் சிக்கினார். மனைவி பிரியா பிடிபடவில்லை. அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியாமலேயே உள்ளது. பிரியாவை கைது செய்யவும் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இது தொடர்பாக போலீசார் தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *