Tamilசெய்திகள்

காஷ்மீர் பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமிக்க நேரு தான் காரணம் – அமித்ஷா பரபரப்பு பேச்சு

மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல் அக்டோபர் 21-ம் தேதி நடைபெறும் என்ற அறிவிப்பு நேற்று வெளியானது. இந்த தேர்தலை ஆளும்கட்சியான பாஜகவும் சிவசேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து இந்த தேர்தலை சந்திக்கின்றன.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநில தலைநகரான மும்பையில் இன்று நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய தலைவரும் மத்திய உள்துறை மந்திரியுமான அமித் ஷா பங்கேற்று பேசினார்.

எதிர்வரும் சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றிபெற்று மீண்டும் இங்கு ஆட்சி அமைக்கும். தேவேந்திர பட்னாவிஸ் முதல் மந்திரியாக மீண்டும் பதவி ஏற்பார் என நம்பிக்கை தெரிவித்த அமித் ஷா, பாராளுமன்ற தேர்தலில் மக்கள் அளித்த மகத்தான தீர்ப்பு தந்த பலத்தால், முதல் பாராளுமன்ற கூட்டத்தொடரின்போதே காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் துணிச்சல் பிரதமர் நரேந்திர மோடிக்கு வந்தது. அதற்காக அவரை மனமார பாராட்டுகிறேன் என குறிப்பிட்டார்.

’காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதை காங்கிரஸ் அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்கிறது. ஆனால், நாங்கள் அப்படி பார்க்கவில்லை. இந்த சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பின்னர் காஷ்மீருக்குள் துப்பாக்கிகள் மவுனித்து இருக்கின்றன. இதுவரை ஒரு தோட்டா கூட சுடப்படவில்லை.

ராகுல் காந்தியும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரும் காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதை ஆதரிக்கிறார்களா? எதிர்க்கிறார்களா? என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்.

ராகுல் காந்தி சமீபத்தில் அரசியலுக்கு வந்தவர். ஆனால், காஷ்மீருக்காகவும் அங்குள்ள சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் பாஜகவினர் மூன்று தலைமுறைகளாக உயிரை கொடுத்தவர்கள். இது எங்களுக்கு அரசியல் விவகாரமல்ல. பாரத மாதாவை பிரிக்காமல் வைத்திருக்க வேண்டும் என்ற எங்கள் நோக்கத்தின் ஒரு பகுதியாகும்.

காஷ்மீர் முன்னர் இந்தியாவுடன் இணைக்கப்படாததற்கு முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு இந்த பிரச்சனையை சரியாக கையாளாமல் போனதுதான் காரணம். மறைந்த முன்னாள் மத்திய உள்துறை மந்திரி சர்தார் வல்லபாய் பட்டேல் இந்த விவகாரத்தை கையாண்டிருந்தால் முடிவு வேறு விதமாக அமைந்திருக்கும்.

1947-ம் ஆண்டில் பாகிஸ்தானியர்கள் நமது நாட்டுக்குள் ஊடுருவியபோது நம்முடைய ராணுவம் முழு பலத்துடன் போரிட்டது.

ஆனால், அன்றைய பிரதமர் நேரு அவசியமற்ற நேரத்தில் போர்நிறுத்த அறிவிப்பை வெளியிட்டார். அவர் மட்டும் அப்படி செய்யாமல் இருந்திருந்தால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்ற பகுதி உருவாகாமல் போயிருக்கும்’ எனவும் அமித் ஷா தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *