Tamilசெய்திகள்

கவர்னர்கள் பா.ஜ.கவின் ஊதுகுழலாக இருக்கிறார்கள் – மம்தா பானர்ஜி தாக்கு

மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த கவர்னர் பகத்சிங் கோ‌ஷியாரி அறிக்கை அளித்ததை மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி மறைமுகமாக சாடினார்.

இதுபற்றி அவர் கூறுகையில், ‘‘நான் பொதுவாக அரசியல்சாசன பதவிகளைப்பற்றி கருத்து சொல்வதில்லை. ஆனால் சிலர் (கவர்னர்கள்) பா.ஜனதா கட்சியின் ஊதுகுழல்களாக செயல்படுகிறார்கள். எனது மாநிலத்திலும்கூட, என்ன நடக்கிறது என்பதை நீங்கள் பார்க்கத்தான் செய்கிறீர்கள். அவர்கள் (கவர்னர்கள்) மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இணையான மற்றொரு அரசு நிர்வாகத்தை நடத்த விரும்புகிறார்கள்’’என குறிப்பிட்டார்.

மேலும், ‘‘மத்திய, மாநில அரசுகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. கூட்டாட்சி அமைப்பு, அரசியல்சாசனத்தின் அடிப்படையில் செயல்பட வேண்டும். அரசுகள் செயல்பட அனுமதிக்க வேண்டும்’’ என்றும் கூறினார்.

மேற்கு வங்காளத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கும், கவர்னர் ஜெகதீப் தங்கருக்கும் இடையே பல்வேறு பிரச்சினைகளில் மோதல் போக்கு நிலவுவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *