Tamilசெய்திகள்

ஐ.எஸ் பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தில் உள்ள கடைசி பகுதியை மீட்கும் முயற்சியில் அமெரிக்கா

உலகையே அச்சுறுத்தி வந்தவர்கள் ஐ.எஸ். பயங்கரவாதிகள். அமெரிக்க நகரங்களில் விமானங்களை மோதி தாக்குதல்களை நடத்தி உலகையே பதற வைத்த அல்கொய்தா பயங்கரவாதிகளை விட ஐ.எஸ். பயங்கரவாதிகள் மோசமானவர்கள் என்று அமெரிக்காவே ஒப்புக்கொண்டது.

2 ஆண்டுகளுக்கு முன்னர் சிரியா, ஈராக் நாடுகளின் முக்கிய நகரங்களை ஐ.எஸ். பயங்கரவாதிகள் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தனர். அவர்களை ஒழித்துக்கட்டுவது என்பது உள்நாட்டுப்படைகளுக்கு கடினமான காரியம் என்பதை அமெரிக்கா உணர்ந்தது.

இதனால் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அமெரிக்க கூட்டுப்படைகள் இவ்விரு நாடுகளிலும் களம் இறங்கின. உள்நாட்டுப்படைகளுடன் கரம் கோர்த்து நடத்திய தாக்குதல்களில் பெரிய அளவுக்கு அமெரிக்க கூட்டுப்படைகளுக்கு வெற்றியும் கிடைத்தது.

அவை, பல முக்கிய நகரங்களை ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து மீட்டெடுத்து விட்டன. இது ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு பின்னடைவாக அமைந்தது.

இருப்பினும் இவ்விரு நாடுகளிலும் இன்னும் 14 ஆயிரம் முதல் 18 ஆயிரம் ஐ.எஸ். பயங்கரவாதிகள் இருப்பதாக ஐ.நா. சபை புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

சிரியாவைப் பொறுத்தமட்டில், கடந்த சில மாதங்களாக ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வந்த வட கிழக்கு பகுதியில் அமைந்துள்ள நகரங்கள், கிராமங்களில் அமெரிக்க கூட்டுப்படைகள், உள்நாட்டு படைகளுடன் கடும் தாக்குதல் நடத்தின.

அங்கிருந்து ஐ.எஸ் பயங்கரவாதிகளை விரட்டியடித்தன.

இதையடுத்து ஐ.எஸ். பயங்கரவாதிகளை முற்றிலும் ஒழித்து விட்டதாக கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார். சிரியாவில் இருந்து அமெரிக்க படை வீரர்கள் 2 ஆயிரம் பேரையும் திரும்பப்பெறுவதாகவும் அவர் அறிவிப்பு வெளியிட்டார்.

இருப்பினும் சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை முற்றிலும் ஒடுக்க வில்லை என்பதை இப்போது உணர்ந்த டிரம்ப், ஐ.எஸ். பயங்கரவாதிகளை முழுமையாக ஒழித்துக்கட்டி விட்டோம் என்ற அறிவிப்பை அடுத்த வாரம் வெளியிடுவோம் என கடந்த 6-ந் தேதி அறிவித்தார்.

இந்த நிலையில் சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தில் உள்ள கடைசி பகுதி, ஈராக் எல்லையில் அமைந்துள்ள டெயிர் அல் ஜோர் மாகாணத்தின் பாகுஸ் கிராமம் என தெரிய வந்தது.

அங்கு கடுமையான தாக்குதல்களை நடத்தி, முழுமையான வெற்றி பெற அமெரிக்கா திட்டம் தீட்டியது. இந்த தாக்குதல்கள் நடத்துவதற்கு முன்னதாக அப்பாவி உள்ளூர் மக்கள் 20 ஆயிரம் பேரையும் அங்கிருந்து பத்திரமாக வெளியேறச்செய்ய வேண்டும் என விரும்பியது. அதற்கு ஒரு வார கால அவகாசம் தரப்பட்டது. அதன்படி அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு விட்டனர்.

இதையடுத்து அந்த பகுதியில் அமெரிக்க கூட்டுப்படைகள், ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் உக்கிரமாக சண்டை போட்டு வருகின்றன.

இதுபற்றி சிரியா படை செய்தி தொடர்பாளர் கருத்து தெரிவிக்கையில், “ தாங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிற கடைசி பகுதியில், அனுபவம் வாய்ந்த பயங்கரவாதிகள் கடுமையாக சண்டையிட்டு வருகின்றனர்” என குறிப்பிட்டார்.

இந்த சண்டையின் முடிவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் சிரியாவில் இருந்து முழுமையாக ஒடுக்கப்பட்டு விடுவர் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *