Tamilவிளையாட்டு

உலகக்கோப்பை கிரிக்கெட் லீக் – பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி

இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 22-வது லீக் ஆட்டம் மான்செஸ்டரில் நேற்று மதியம் 3 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் தவானுக்குப் பதில் விஜய் சங்கர் இடம்பிடித்தார்.

ரோகித் சர்மா (140), லோகேஷ் ராகுல் (57), விராட் கோலி (71 மழையின்போது ஆட்டம் நிறுத்தப்பட்டபோது எடுத்த ரன்) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா 46.4 ஓவரில் 305 ரன்கள் எடுத்திருக்கும்போது மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

சுமார் அரைமணி நேரம் கழித்து மழை நின்றதும் மீண்டும் ஆட்டம் தொடங்கியது. விராட் கோலி 77 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மழைக்குப்பின் இந்தியா விளையாடி 20 பந்தில் 31 ரன்கள் எடுக்க ஒட்டுமொத்தமாக 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் குவித்தது.

விஜய் சங்கர் 15 பந்தில் 15 ரன்கள் எடுத்தும், கேதர் ஜாதவ் 8 பந்தில் 9 ரன்கள் எடுத்தும் களத்தில் இருந்தனர். பாகிஸ்தான் அணி சார்பில் முகமது அமிர் 47 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். இதனால் பாகிஸ்தானுக்கு 337 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா.

பின்னர் 337 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறக்கியது. இந்நிலையில் 35-வது ஓவரில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணி 35 ஒவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்துள்ளது. பாகிஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக பக்தர் சமான் 62(75) ரன்களும், பாபர் அசாம் 48(57) ரன்களும் எடுத்திருந்தனர். இமாத் வாசிம் 22(20) ரன்களும், சதாப் கான் 1(2) ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

இரண்டாவது முறை மழை குறிக்கிட்டதால் டி.எல்.எஸ். முறைப்படி ஆட்டம் 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது. பாக். அணி 302 ரன்கள் எடுத்தால் வெற்றி என நிர்ணயிக்கப்பட்டது. டி.எல்.எஸ். முறைப்படி பாகிஸ்தான் அணி 30 பந்துகளில் 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களம் இறங்கியது.

இதனை தொடர்ந்து ஆடிய பாக். அணி வீரர்கள் இமாத் வாசிம் 46 (39) ரன்களும், சதாப் கான் 20(14) ரன்கள் எடுத்து களத்தில் நின்றனர். இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 40 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.

இந்திய அணியின் சார்பில் குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, விஜய் சங்கர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *