Tamilசெய்திகள்

இன்று வங்கிகள் வேலை நிறுத்தம்!

வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை (21-12-2018) அன்று ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து 2-வது சனிக்கிழமை, கிறிஸ்துமஸ் என அடுத்தடுத்து விடுமுறைகள் வந்ததால் வங்கிப் பணிகள் பாதிக்கப்பட்டன. விடுமுறைகள் முடிந்து வங்கிப் பணிகள் இன்று மீண்டும் துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 9 முன்னணி வங்கி சங்கங்களின் கூட்டு அமைப்பான வங்கி தொழிற்சங்கங்களின் ஐக்கிய அமைப்பு இன்று வேலைநிறுத்தம் செய்ய அழைப்பு விடுத்துள்ளது.

பேங்க் ஆஃப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி உள்ளிட்ட வங்கிகளை ஒன்றாக இணைக்க கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதனைக் கண்டித்து வங்கிகள் இன்றும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளன.

தொடர் விடுமுறை காரணமாக முடங்கிப்போன வங்கிப் பணிகள் இன்று துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்றும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதால், வங்கிச்சேவை பாதிக்கும் நிலை உருவாகி உள்ளது. இந்த வேலைநிறுத்தத்தில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *