Tamilவிளையாட்டு

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் தொடர் டிசம்பரில் நடப்பது உறுதியானது!

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நவம்பர் மாதம் முதல் ஜனவரி வரை ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாட முடிவு செய்துள்ளது.

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு திட்டமிட்டபடி வரும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் தெரிவித்தது.

இந்த நிலையில் டெஸ்ட் போட்டி நடைபெறும் இடங்கள் மற்றும் தேதி விவரங்களை ஆஸ்திரேலியாவின் இரண்டு மீடியாக்கள் வெளியிட்டுள்ளன. இதன்படி இந்த டெஸ்ட் தொடர் டிசம்பர் 3-ந்தேதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது.

இந்தியா – ஆஸ்திரேலியா மோதும் 2-வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 11-ந்தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. இது பகல் – இரவாக நடத்தப்படுகிறது.

3-வது டெஸ்ட் மெல்போர்னில் டிசம்பர் 26-ந்தேதியும், 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் ஜனவரி 3-ந்தேதியும் தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதிகாரபூர்வ போட்டி அட்டவணையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இந்த வார இறுதிக்குள் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி முதல் முறையாக ஆஸ்திரேலியாவுடன் பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.

இந்திய அணி ஒரே ஒரு பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் மட்டுமே ஆடி உள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொல்கத்தாவில் நடந்த இந்த இளம் சிவப்பு பந்து டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 46 ரன் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது.

ஆஸ்திரேலியா 7 பகல்-இரவு டெஸ்டில் விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகளை தோற்கடித்து இருந்தது. இதனால் இந்திய அணி பகல்-இரவு டெஸ்டில் ஆஸ்திரேலியாவை சமாளிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

2015-ம் ஆண்டு இறுதியில் பகலிரவு டெஸ்ட் அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 14 போட்டிகள் நடைபெற்றுள்ளன.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்திய அணியினரை ஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்தி வைக்கலாம் என்று கூறப்பட்டது.

தற்போது தனிமைப்படுத்தி வைக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும் அந்த மீடியாக்கள் தெரிவித்து உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *