ராணிப்பேட்டை மாவட்டம் லாலாப்பேட்டையில் புதிய திருமண மண்டபம் திறப்பு விழா நடந்தது. இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அப்போது அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:- தமிழகத்தில் மே 11-ம் தேதி மாமல்லபுரத்தில் சித்திரை முழு நிலவு பா.ம.க. இளைஞர் பெருவிழா மாபெரும் மாநாடு நடைபெற உள்ளது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மிகப்பெரிய எழுச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் குறிப்பாக தம்பி, தங்கைகள் அனைவரும் பங்கேற்க வேண்டும். இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம் அனைவருக்கும் சமூக நீதி என்பது ஆகும். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் 45 ஆண்டுகளாக தமிழகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறார். இந்த கோரிக்கை மூலமாக தமிழகத்தில் பின்தங்கிய சமூகத்தினருக்கு அவரவர் சமூகத்துக்கு ஏற்ப இட ஒதுக்கீடு, கல்வி, வேலை வாய்ப்பு, அரசு திட்டங்கள் அனைத்தும் கிடைக்க வேண்டும். மேலும், தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும். எனவே தமிழகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பை விரைந்து நடத்த வேண்டும். மேலும் தமிழகத்தில் மொத்தம் 38 மாவட்டங்கள் உள்ளது. இதில் 20 மாவட்டங்கள் மிக மிக பின் தங்கியுள்ளது. இந்த பின் தங்கியுள்ள மாவட்டங்களுக்கு தனி திட்டங்களை வகுத்து அந்த மாவட்டங்களை வளர்ச்சி அடைய செய்ய வேண்டும். இதில் 15 மாவட்டங்கள் வட மாவட்டங்களாக உள்ளது. இங்கு கல்வி, சுகாதார வேலைவாய்ப்பு, தொழில்கள் அனைத்துமே மந்தகதியில் உள்ளது. ஆனால், டாஸ்மாக் கடை விற்பனையில் முதலிடத்தில் உள்ளது. இவ்வாறு அன்புமணி ராமதாஸ் பேசினார்.