Tamilவிளையாட்டு

பாரீஸ் ஒலிம்பிக் – 7 மாத கர்ப்பிணியாக வாள்வீச்சு போட்டியில் பங்கேற்ற வீராங்கனை

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கடந்த ஜூலை 28 ஆம் தேதி முதல் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் தங்களது திறமையையும், மன உறுதியையும் வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், எகிப்து நாட்டு வாள்வீச்சு [Fencing] வீராங்கனை நாடா ஹபீஸ் [Nada Hafez] 7 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையிலும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் கலந்துகொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,”களத்தில் இருந்தது 2 பேர் என்று நினைக்கிறீர்கள். ஆனால் இருந்தது 3 பேர். ஒன்று நான், ஒன்று என் எதிரணி வீராங்னை, மற்றொன்று இந்த உலகத்தை இன்னும் காணாத என் குட்டிக் குழந்தை” என்று தான் கர்ப்பமாக இருப்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் தனிநபர் பெண்கள் வாள்வீச்சு போட்டிகளில் முதலில் அமெரிக்க வீராங்கனை எலிஸபத் ட்ரக்கோவ்ஸ்க்கியுடன் விளையாடி வெற்றி பெற்ற நாடா ஹபேஸ் சுற்று 16 க்கு முன்னேறினார்.

நேற்று முன்தினம் ஜூலை 29 சுற்று 16 போட்டியில் தென்கொரிய வீராங்கனை ஜியோன் ஹயோங் [Jeon Hayoung] உடன் மோதிய நாடா ஹபேஸ் 15-7 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியைத் தழுவினார். இந்நிலையில் அவரது மன உறுதிக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.