Tamilசெய்திகள்

நவீன தமிழ்நாட்டின் வளர்ச்சியில் தலைவர் கலைஞர் அவர்கள் கம்பீரமாக இருக்கிறார் – கனிமொழி எம்.பி

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் 101-வது பிறந்த நாள் இன்று. கலைஞரின் 101-வது பிறந்தநாளையொட்டி அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளனர்.

கனிமொழி எம்.பி. தனது எக்ஸ் தளத்தில்,

நவீன தமிழ்நாட்டின் வளர்ச்சியின் ஒவ்வொரு சுவடிலும் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் கம்பீரமாக விளங்குகிறார். இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் தமிழினத்திற்கு அவர் ஆற்றிய தொண்டும் பங்களிப்பும் காலத்தால் அழியாத வரலாறாக விளங்கும்.

வாழ்க முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் புகழ்!
வெல்க தமிழ்நாடு!
வெல்க இந்தியா!

என்று தெரிவித்துள்ளார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில்,

பெரியாரின் கனவுகளுக்கும், அண்ணாவின் குறிக்கோள்களுக்கும் தன்னுடைய சட்ட-திட்டங்கள் மூலம் செயல்வடிவமளித்து, தாழ்ந்து கிடந்த தமிழ்நாட்டைத் தரணி போற்றும் வகையில் தலை நிமிரச் செய்தவர் நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். அத்தகைய கலைஞரின் நூற்றாண்டு நிறைவில் இருக்கிறோம்.

எழுதி, பேசி, தமிழ்நாடு முழுக்க நடையாய் நடந்து, ‘ஓய்வெடுக்காமல் உழைத்த’ கலைஞர் அவர்களின் நூற்றாண்டை, நம்முடைய கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு மற்றும் கழகத்தின் சார்பாக #கலைஞர்100 என்ற புகழ் பரப்பும் பெரு விழாவாக ஆண்டு முழுக்க நடத்தியிருக்கிறார்.

இந்த ஒரு நூற்றாண்டில் முத்தமிழறிஞர் கலைஞர் செய்த சாதனைகள் அனைத்தும் காலத்தை வென்று, இன்னும் பல நூறாண்டுகள் கடந்தும் மக்கள் மனதில் நிரந்தரமாக நிலைத்து நிற்கும்.

கலைஞர் வாழ்க… அவர் புகழ் ஓங்குக! என்று தெரிவித்துள்ளார்.