Tamilசெய்திகள்

காதலியை முன்பக்கம் உட்கார வைத்து மோட்டார் சைக்கிள் ஓட்டிய இளைஞர் மீது நடவடிக்கை

பெங்களூரு விமான நிலைய ரோட்டில் விபத்துகளை தடுக்க வேகக்கட்டுப்பாடு மற்றும் விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் மூலமாக போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர்.

இந்த நிலையில் விமான நிலைய ரோட்டில் உள்ள எலகங்கா மேம்பாலத்தில் கடந்த 17-ந்தேதி ஒரு வாலிபர் தன்னுடைய காதலியை மடியில் அமர வைத்து ஆபத்தான முறையில் எலகங்கா- ஹெப்பலை இணைக்கும் கொடிகேஹள்ளி மேம்பாலத்தில் மோட்டார்சைக்கிளை ஓட்டி சென்றார். அதாவது பெட்ரோல் டேங்க் மீது அமர்ந்திருந்த இளம்பெண், தனது காதலனின் தொடை மீது ஏறி அமர்ந்து கட்டியணைத்தப்படி இருந்தார். இதனை வாலிபருக்கு பின்னால் வந்த ஒரு வாகன ஓட்டி தனது செல்போனில் வீடியோ எடுத்திருந்தார்.

அந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுபற்றி எலகங்கா போக்குவரத்து போலீசாரின் கவனத்திற்கும் வந்தது. அந்த வாலிபர் மற்றும் இளம்பெண் ஹெல்மெட் அணியாமலும், விதிமுறைகளை மதிக்காமலும் மோட்டார்சைக்கிளில் வலம் வந்தது தெரியவந்தது. மோட்டார் சைக்கிளின் பதிவு எண் மற்றும் சி.சி.டி.வி காட்சிகள் மூலம் இருவரையும் போலீசார் கண்டுபிடித்தனர்.

விசாரணையில் அந்த மோட்டார் சைக்கிளை ஓட்டியவர் சாம்புரா எம்.வி.லே-அவுட்டை சேர்ந்த சிலம்பரசன் (வயது 21) என்பதும், வாடகை கார் டிரைவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 279 (அதிகமாக அல்லது அலட்சியமாக வாகனம் ஓட்டுதல்) மற்றும் 189 (பொது சாலையில் பந்தயம் அல்லது வேகமாக ஓட்டுதல்), மோட்டார் வாகன சட்டம் 177 போக்குவரத்து விதிகளை பின்பற்றாதது, வாகனம் ஓட்டும்போது ஹெல்மெட் அணியாதது உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிலம்பரசனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. அவரது ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யவும் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு பரிந்துரை செய்துள்ளனர்.