Tamilசெய்திகள்

தமிழகத்தில் 6 ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகி வருகிறது. பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்கிறது. ஒரு சில மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. பருவமழை தொடங்கியது முதல் இன்னும் எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை. இதுவரையில் இயல்பை விட குறைவாகவே மழை பெய்துள்ளது. ஆனாலும் தமிழகத்தின் தென் மாவட்டங்கள், கோவை, நீலகிரி, மலை மாவட்டங்கள் மற்றும் வடமாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.

இந்த நிலையில் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மழை பெய்கிறது. ஒரு சில மாவட்டங்களில் கனமழையும் பெய்கிறது.

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மிக கனமழையும், மேலும் 2 நாட்களுக்கு ஒரு சில மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்துள்ளது. நேற்றிரவு தொடங்கிய மழை விடிய விடிய பெய்தது. மேலும் 6-ந்தேதி வரை கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று கனமுதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்ற எச்சரிக்கையை தொடர்ந்து மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மேலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தேனி, திண்டுக்கல், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம் ஆகிய 19 மாவட்டங்களில் மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலையில் இருந்தே வானம் இருள் சூழ்ந்து காணப்பட்டது. மழையும் விட்டு விட்டு பெய்கிறது. மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்தது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் பில்லூர் அணை, மேட்டுப்பாளையத்தில் 13 செ.மீ. மழை பெய்துள்ளது. கமுதி, சிவகிரி, சென்னை ஆலந்தூர் ஆகிய பகுதிகளில் 12 செ.மீ., புழல், அதிராமபட்டினம் தலா 11 செ.மீ., சிங்கணபுரி 10 செ.மீ., மீனம்பாக்கம், சென்னை விமான நிலையம் தலா 9 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.