
விசாலம்
வாஸ்து புருஷன் தூங்கும் நேரம், விழிக்கும் நேரம் என்று நாம் பஞ்சாங்கத்தில் பார்த்திருக்கிறோம். இந்த வாஸ்து புருஷன் யார் என்ற கேள்வி பலருக்கு உண்டாகலாம். இதற்கு ஒரு புராணக் கதை.
அண்டகாசுரன் தன் தவத்தினாலும் அதனால் பெற்ற வரத்தினாலும் தன்னை ஒருவரும் ஒன்றும் செய்ய முடியாது என்று நினைத்து தேவர்களுக்குத் தொந்தரவு கொடுக்கத் தொடங்கினான். தேவர்களும் சிவனிடம் சென்று முறையிட்டு, தங்களைக் காக்கும்படி கேட்டுக்கொண்டனர். சிவபெருமானும் அண்டகாசுரனுடன் கடும் போரிட்டார்.
அப்போது அவர் முகத்திலிருந்து வியர்வைத் துளிகள் கீழே பூமியில் விழ, அந்தத் துளியிலிருந்து ஒரு பூதம் போல் பெரிய மனித உருவம் தோன்றியது. தோன்றியபோதே 'பசி பசி' என்று அலைந்தது. அப்போது சிவபெருமான், அண்டகாசுரனைக் கொன்று, அவனைக் கீழே போட்டார். பின் அந்த உடலைத் தின்று பசியாற்றிக்கொள்ளும்படி சொன்னார். அதைத் தின்றபின்னும் அந்த உருவம் 'பசி' என்று அலைந்து, தேவலோகத்தில் புகுந்து தொந்தரவு செய்தது. அதனின் தொந்தரவு தாங்காமல் அதனைக் கீழே தள்ளி, குப்புறப் படுக்க வைத்து, அதன் மேல் 45 தேவதைகள் அமர்ந்தனர்; துன்புறுத்தினர்; அந்த உருவமும் பிரும்மாவை வேண்டித் தன்னைக் காக்கும்படி சொன்னது.
பிரும்மாவும் அதன் முன் தோன்றிக் காத்தருளினார். பின் அந்த உருவத்திற்கும் ஒரு பதவி அளித்தார். அதாவது புதுக் கட்டடம், கட்டுபவர் உனக்குப் பூஜை செய்து படையல் படைத்த பின்தான் வீடு கட்டத் தொடங்க வேண்டும் என்றார்.
"அப்படி செய்யவில்லை என்றால் நான் அவர்களுக்குத் தொந்தரவு கொடுப்பேன்" என்றது அந்த மனித உருவம். பிரும்மாவும் அதற்குச் சம்மதித்து அதன் பெயரை வாஸ்து புருஷன் என்று வைத்தார்.
வாஸ்து புருஷன் வருடத்தில் எட்டு நாட்கள் தான் விழித்திருப்பார்; மற்ற நாட்களில் தூங்குவதாகச் சொல்லப்படுகிறது. அந்த எட்டு நாட்களிலும் ஒன்றரை மணி நேரம்தான் விழித்திருப்பார். அதில் முதலில் விழித்தவுடன் காலைக் கடன் செய்வார்; பின் குளித்து வருவார்; பின் பூஜை செய்வார்; அதற்குப் பிறகு போஜனம்; போஜனத்திற்குப் பின் தாம்பூலம் போடுவார். இப்போது அவர் தாம்பூலம் போடும் நேரத்தில் வாஸ்து பூஜை, பூமி பூஜை செய்ய, வீடு மளமளவென்று ஏறி, ஒரு பிரச்சனையும் இல்லாமல் முடிவடையும்.
வாஸ்து புருஷனைக் கீழே தள்ளி அவன் மேல் 45 தேவதைகள் அவன் முதுகில் அமர்ந்த இடம் தான் வாஸ்து மண்டலம் என்பது. இது சதுரமாக இருக்கும். பிரும்மா வாஸ்துவைக் காப்பாற்றியதால் வீட்டின் நடுப் பாகம் பிரும்மாவுக்காகக் கொடுக்கப்பட்டு, அதற்கு பிரும்மஸ்தானம் என்ற பெயரும் சூட்டப்பட்டது.
வாஸ்து புருஷன் விழிக்கும் நாட்கள்:
சித்திரை 10ஆம் தேதி
வைகாசி 21ஆம் தேதி
ஆடி 11ஆம் தேதி
ஆவணி 6ஆம் தேதி
ஐப்பசி 11ஆம் தேதி
கார்த்திகை 8ஆம் தேதி
தை 12ஆம் தேதி
மாசி 22ஆம் தேதி
வாஸ்து தினமும் தூங்கும் போது அசைந்து அசைந்து, ஒரு இடம் இல்லாமல் மாறுகிறார். இதனால் சில மாதங்களில் அவர் படுக்கும் திசை மாறிவிடுகிறது.
இரவில் 12இலிருந்து 3 வரை கிழக்கை நோக்கி இருக்கிறார்
காலை 3இலிருந்து 6 வரை தெற்கை நோக்கி இருக்கிறார்
காலை 6 முதல் 9 வரை மேற்கில் இருக்கிறார்
காலை 9 முதல் 12 வரை வடக்கில் இருக்கிறார்
வாஸ்து பூஜை சரியாகச் செய்தபின் கட்டடம் கட்ட ஆரம்பிக்க, எல்லாம் நலம் தான்.
(தொடரும்....
=============================================
வாஸ்து தொடர்பான உங்கள் கேள்விகள் / ஐயங்களுக்கு விசாலம் பதில் அளிப்பார். உங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி: tamileditor@chennaionline.com
Oct 08, 2009
* Do not use semicolon(;)