
விசாலம்
வீடு என்பது சுவர்க்கமாக இருக்க வேண்டும். அங்கு அமைதி நிலவுதல் மிக அவசியம். சிலர் குடிசை வீட்டிலும் கூழோ, கஞ்சியோ குடித்தாலும் சந்தோஷமாக வாழ்கிறார்கள். பின் அவர்களே பங்களா வாங்கும் நிலைக்கும் உயர்ந்து விடுகிறார்கள். சிலர் பெரிய வீட்டில் இருந்தாலும் மனக் கஷ்டம், வியாதியுடன் ஒவ்வொரு நாளும் ஒரு யுகமாகக் கழிக்கிறார்கள். ஒவ்வொருவரும் புது வீடு போகும் போது தானும் தங்கள் குடும்பமும் நன்றாக வாழ வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் போகிறார்கள். ஆனால் சிலருக்கு எண்ணம் பலிக்கிறது. மற்றவர்களுக்கு ஏமாற்றம் தான்.
இது ஏன் நடக்கிறது? வாஸ்து என்ற மனக் கலை சரியாக அமையாததால் தான். சந்தோஷம் குறையாமலும் சகல வளமும் பெற வழிகாட்டியாக இருப்பது இந்தக் கலைதான். கடவுள் நம்பிக்கையுடன் முதலில் ஒரு பிரார்த்தனை செய்து பின் மனை வாங்க நன்மைதான். முதலில் விக்னமிலாமல் இருக்க, முதல் கடவுள் கணபதியைத் தொழ, பின் பூமிக்காரன் செவ்வாய்க்கு அதிபதி ஸ்ரீ முருகனையும் வேண்டிக்கொண்டு வீடு வாங்கும் வேட்டையில் இறங்க வேண்டும். எல்லாவற்றுக்கும் முதலாக அவரவர் குலதெய்வ வழிபாடும் மிக முக்கியம்.
இப்போது வருவோம் மனை வாங்கும் கட்டத்திற்கு. மனை இல்லாமல் வீடு கட்ட முடியாது. அது குடிசையாக இருந்தாலும் சரி, கோபுரமாக இருந்தாலும் சரி. மனை சாஸ்திரம் சரியாக அமைந்துவிட்டால் அங்குக் கட்டும் வீடும் அதில் வசிக்கப் போகும் மனிதர்களும் ஒரு குறைவும் இல்லாமல் பிரமாதமாக இருப்பார்கள். சாஸ்திரத்திற்கு முரணாக அமைந்துவிட்டால் எத்தனை கோடி செலவு செய்து கட்டியும் தொல்லைகளும் துன்பங்களும் தான் பார்க்க முடியும்.
எந்த மனை வாங்கினாலும் அது சதுரமாக இருப்பது மிக அவசியம் சதுரத்தில் ஒரு பக்கம் கொஞ்சம் கோணலோ அல்லது நீண்டோ காணப்பட்டால் அதைச் சதுரமாக்கிய பின் தான் கட்ட வேண்டும். மனை கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என்று நாலு திசையில் அமையலாம். இருப்பதற்குள் முதல் இடம் பெறுவது கிழக்கு நோக்கிய மனை. அடுத்து வருவது வடக்கு நோக்கிய மனை. மறற இரண்டும் சுமார் என்று தான் சொல்ல வேண்டும்.
ஆனால் இந்தக் கிழக்கு நோக்கிய மனையும் நல்ல மனை என்ற விதிக்குள் வந்து தோஷமில்லாமல் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். கிழக்கு திசை நோக்கிய மனை சிறந்த செல்வாக்கும் புகழும் அளிக்கும். கல்விகளில் தேர்ச்சி, நல்ல நண்பர்கள், நல்ல எண்ணங்கள் என்று மிகவும் சுபீட்சத்தைக் கொடுக்கும். ஆனால் இந்த கிழக்கு மனையானது தோஷமில்லாமல் இருக்க வேண்டும். அதாவது, கிழக்கு நோக்கிய மனையில் கிழக்குப் பகுதி குறுகியோ அல்லது துண்டித்தோ இருக்கக் கூடாது. தவிர, அந்த மனை முன்பு ஒரு மயான பூமியாகவோ இருந்தாலும் பிரச்சனை தான். அஸ்திவாரம் போடும் போது பார்க்காமல் எலும்புத் துண்டு அல்லது மணடை ஓடு போல் தங்கினாலும் தோஷம் உண்டு என்று சொல்கிறார்கள்.
வடக்கு மனை, வியாபாரிகளுக்கு மிகவும் நல்லது. நல்ல வியாபாரம் நடக்கும். அதிக லாபம் வரும். வசதியான வாழ்க்கை, ஆடம்பரப் பொருட்களின் சேர்க்கை, நல்ல திருமண வாழ்க்கை, மக்கள் செல்வங்கள், கல்வி என்று பல நற்பலன்கள் உண்டாகின்றன.
எப்போதும் பணம் இரட்டிப்பு ஆக்கும் சிந்தனையே மிகும். அதனால் இது பெரிய வியாபாரிகளுக்கு ஏற்ற திசைச் செலவுகள் வந்தாலும் அது சுபச் செலவுகளாக இருக்கும். வடக்கு திசையில் தான் குபேரன் இருக்கிறான் என்பார்கள் இதிலும் தோஷமில்லாமல் பார்த்து வாங்க வேண்டும். வடகிழக்கு, குறுகி இருக்கக் கூடாது. அதே போல் வட மேற்கு நீண்டு இருத்தல் ஆகாது.
(தொடரும்....
=============================================
வாஸ்து தொடர்பான உங்கள் கேள்விகள் / ஐயங்களுக்கு விசாலம் பதில் அளிப்பார். உங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி: tamileditor@chennaionline.com
Jun 03, 2009
* Do not use semicolon(;)