
விசாலம்
நம் எல்லோருக்கும் பஞ்ச பூதங்களைப் பற்றி நன்றாகவே தெரியும். நிலம், நீர், அக்னி, காற்று, வானம் அல்லது ஆகாயம் - இவைதாம் பஞ்ச பூதங்கள். இந்தப் பஞ்ச பூதங்களுக்கு ஏற்ப கோயில்களும் உள்ளன.
காஞ்சிபுரம் பூமிக்காகவும் வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயில் நீருக்காகவும் திருவண்ணாமலை நெருப்புக்காகவும் காளஹஸ்தி வாயுக்காகவும் சிதம்பரம் ஆகாயத்திற்காகவும் கட்டப்பட்டிருக்கின்றன. இந்தச் சக்திகளைக் கொண்டே ஆயுர்வேதமும் செயல்படுகிறது. நம் உடலிலும் இவை இருக்கின்றன. இவை சரிவர ஒன்றுக்கொன்று இயங்கினால் ஆரோக்கியமாக இருக்க முடியும். அதேபோல் வீட்டிற்கும் இந்தப் பஞ்ச பூதத் தத்துவம் உண்டு. அவை ஒன்றுக்கொன்று முரண்பாடானால் வீட்டின் நிம்மதி போகிறது. அதாவது நீருக்கென்ற இடத்தில் அக்னி அமைவது. அக்னி இருக்கும் இடத்தில் டாய்லெட் அமைவது போல் வீடு வாய்த்தால் அங்கு பிரச்சனைகள் தான்.
பூமியை நிலமாக நாம் கொள்கிறோம். அதுவே பூமாதேவி என்று பூஜையும் செய்கிறோம். பூமி தன்னைச் சுற்றிக்கொண்டே சூரியனையும் சுற்றி வருகிறது என்று நாம் பள்ளியில் படித்திருக்கிறோம். தவிர பூமி நேராக இல்லாமல் சற்று சாய்ந்தபடியும் இருக்கிறது.
சூரியன் கடக லக்னத்திற்கு வரும்போது உத்தராயண காலம் எனவும் மகர லக்னத்திற்கு வரும் போது தக்ஷிணாயன காலம் எனவும் அழைக்கின்றனர். ஒவ்வொன்றும் ஆறு மாதங்கள். உத்தராயணம் மிகச் சிறந்தது என்கின்றனர் சான்றோர். பீஷ்ம பிதாமகரும் தன் உயிரை உத்தராயணத்தில் போகும் வரை பிடித்து வைத்திருந்தார் என மஹாபாரதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
வீடு கட்டுதல் உத்தராயண காலத்தில் தொடங்க, கிரஹங்களின் பலன் கூடுதலாகக் கிடைக்கிறது என்கிறார்கள் சிலர். இந்தக் காலத்தில் கட்டப்பட்ட வீடு மகிழ்ச்சியையும் செழிப்பையும் தருகிறதாம். ஒவ்வொரு கிரஹத்திற்கும் ஒவ்வொரு மாதிரி ஈர்ப்புச் சக்தி உண்டு. அதனதன் தொலைவு, வடிவங்கள் பொருத்து இது மாறுகிறது. பூமியும் தன் காந்தச் சக்தியால் கிரஹங்களின் சக்திகளை ஈர்க்கிறது. அப்படிப் பார்க்கும் போது வட்டத்தைவிட அல்லது வேறு கோணங்களைவிட சதுரத்திற்கு அதிகச் சக்தி கிடைக்கிறது. அதேபோல் நீள் சதுரத்திற்கும் சக்தி கூடுதலாகக் கிடைக்கிறது. இதனால் தான் மனை சதுரமாக அல்லது நீள்சதுரமாக இருந்தால் நல்லது என்கிறார்கள். அங்கு கூடுதல் சக்தி கிடைக்க வாய்ப்புகள் அதிகம்.
இதனால்தான் சில வீடுகளில் சதுர வடிவில் கிணறு கட்டுகிறார்கள். எல்லாக் கோயில்களின் குளங்கள் சதுரவடிவில் தான் இருக்கின்றன. நீருக்கென்ற இடம் வடகிழக்காக இருப்பதால் அநேக கோயில்களில் வடகிழக்கில் சதுர வடிவில் நாம் குளங்களைப் பார்க்கிறோம்.
வாஸ்து சாஸ்திரத்தின் பக்க பலம் சரியான காந்தச் சக்தியே. காந்த முள் எப்போதும் வடக்கு நோக்கி நிற்பதைப் நாம் பார்த்திருக்கிறோம். அதனால் வடக்கும் தெற்கும் சரியான காந்தச் சக்தியால் கட்டப்பட்டுவிட்டால் அந்த வீட்டில் வசந்தம் வீசும்.
பஞ்சபூதங்கள் இயற்கையின் சக்திகள். இவை எல்லோருக்கும் சமம். இவற்றை நல்ல பேலன்ஸுடன் உபயோகிக்க, வீட்டில் அமைதி, வளர்ச்சி, நிம்மதி கிடைக்கும்.
(தொடரும்.......
=============================================
வாஸ்து தொடர்பான உங்கள் கேள்விகள் / ஐயங்களுக்கு விசாலம் பதில் அளிப்பார். உங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி: tamileditor@chennaionline.com
Jun 15, 2009
* Do not use semicolon(;)