
விசாலம்
இப்போது கட்டப்படும் வீடுகளில் இட நெருக்கடி காரணமாக நடு இடம் பிரும்மஸ்தானமாக காலியாக விட வாய்ப்பு இல்லை. அதுவும் அடுக்கு மாடி கட்டடங்கள் கட்டும் போது இது போல் ஒன்றை நினைத்துக்கூட பார்க்க முடியாது.
சிலர் கீழே கார் வைக்கும் இடமாக நினைத்து அங்கு காலியாக விடுகிறார்கள். ஆனால் அங்கு பல வாகனங்கள் நிறுத்தப்பட்டு வாஸ்து மிகவும் கெட்டுவிடுகிறது. வீட்டில் நாம் ஹால் என்று சொல்லும் வரவேற்பு அறையை பிரும்மஸ்தனமாக வைத்துக்கொள்ளலாம். ஆனால் அங்கு எத்தனை இலேசான பொருட்கள் வைக்க முடியுமோ, அத்தனை நல்லது. ஆனால் நாம் கனம் கனமாக சோபா செட், நடு மேஜை என்று அழகு செய்து பிரும்மஸ்தானத்தை அடைத்து விடுகிறோம்.
பிரும்மஸ்தானத்தின் வடக்குப் பகுதி, கிழக்குப் பகுதி, வடகிழக்குப் பகுதியிலிருந்து நல்ல சக்தி முதலில் பிரும்மஸ்தானத்தில் வருகிறது. ஆனால் அங்கு அடைசல் இருந்தால் சக்தி ஒரு இடத்தில் அடர்த்தியாக இல்லாமல் கலைந்து போகிறது. வடபகுதியில் நீர்நிலைகள் இருக்க, வாஸ்து சக்திகள் அதிகமாக அதிக வாய்ப்பு உள்ளது. இப்போதும் கிராமங்களின் சில வீடுகளில் நடுவில் இருக்கும் முற்றத்தை அப்படியே விட்டு வைக்கிறார்கள். அங்கு சூரிய வெளிச்சம் நிறைய வருகிறது.
தொழிற்சாலையை எடுத்துக்கொண்டால் அங்கு பல கனமான இயந்திரங்கள் வைக்க வேண்டி இருக்கும். ஆனாலும் அங்கும் பிரும்மஸ்தானம் மிகவும் முக்கியம். அங்கு வாஸ்துவில் கொஞ்சம் மாற்றம் இருந்தாலும் பலன் தெரிந்து விடும். அநாவசியமான முதலாளி - தொழிலாளி மன பேதங்கள், கதவடைப்பு, நஷ்டம் என்று தொழிற்சாலையைப் பூட்டுமளவுக்கு நிலைமை வந்துவிடும். வீட்டில் ஒரு குடும்பம் என்னும் போது ஒரு 5 அல்லது 6 பேர் இருக்கலாம். அதற்கே நாம் வாஸ்து பார்க்கும் போது ஒரு நூற்றுகணக்கானவர்கள் வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி வேண்டுமே! அவர்கள் வாழ்விலும் சந்தோஷம் அமைதி வேண்டுமே!
தொழிற்சாலையில் நடுப் பாகமாக பிரும்மஸ்தானம் விட்டு, அந்த இடத்தை வரவேற்பு அறையாக உபயோகிக்கலாம். நடுவில் ஒன்றுமில்லாமல் காலியாக விட்டு, கொஞ்சம் தள்ளி, தொழிற்சாலைக்கு வரும் அன்பர்களுக்கு அமரும் நாற்காலிகள் போடலாம். அந்த இடத்தில் எந்தப் பொருளும் அதிக கனமில்லாது இலேசாக இருத்தல் வேண்டும். பின் சுற்றி பல அறைகள் அமைக்கலாம். வடமேற்கு அறையில் அதிக பளு வைக்க வேண்டும். அங்கு மிகுந்த கனமான இயந்திரங்கள் போடலாம். இதே போல் அடுத்து கனமான பொருட்கள் வைக்கும் இடம் அல்லது அறை, மேற்கு திசையில் இருக்கும் இடமாகும். இந்தத் திசையையும் விட மிக அதிகமாகப் பளு வைக்கும் இடம், தென் மேற்குப் பகுதியாகும்; வடமேற்கில் ஒரு பங்கு கனம் இருந்தால் மேற்கில் சுமார் இரண்டு பங்கும் தென் மேற்கில் சுமார் மூன்று பங்கு பளுவும் வைக்கலாம்.
மிகவும் காலியாக விடவேண்டிய இடம், வடகிழக்கு. வடகிழக்கில் ஒரு பங்கு கனம் இருந்தால் கிழக்கில் சற்று கூடுதலாகவும் பின் தென் கிழக்கில் இரண்டு பங்கு கூடுதலாகவும் பொருட்கள் வைக்கலாம். வடக்கில் வடகிழக்கை விடச் சற்று கூடுதலாகவும் தெற்கில் அதிகப் பளுவும் வைக்கலாம். இதைப் போல் தொழிற்சாலையில் அனுசரிக்க, சக்தி எல்லா இடத்திற்கும் சமமாகக் கிடைக்கும். அதையும் தவிர தொழிற்சாலையில் யூனியன் பிரச்சினை இல்லாமல் முதலாளியும் தொழிலாளியும் இணைந்து வேலை செய்யும் அனுபவம் கிட்டும்.
தொழிற்சாலையை அழகுபடுத்தச் சிலர் பிளாஸ்டிக் பூக்கள், கொடிகள் போன்றவை வைத்திருப்பார்கள். சிலர் முள்ளுச்செடி, கள்ளிச்செடி என்று பிரும்மஸ்தானத்தில் அதாவது வரவேற்பு அறையில் வைத்திருப்பார்கள். இது சரியல்ல. அந்த இடத்தில் மண்சட்டி அல்லது நீர்வீழ்ச்சிப் போல் உள்ள அழகுப் பொருள் இருக்கக் கூடாது. நடுவில் தூண்களும் கமபங்களும் இருப்பதும் தவறு. தனித்தனி அறையாக்க சின்னச் சின்னத் தடுப்புகள் போட்டு ஆபீசர் அறை, பி ஆர் ஓ, அறை என்று பிரிப்பதும் தவறு தான். பிரும்மஸ்தானத்தில் முக்கியமாக பாத்ரூம் அல்லது டாய்லெட் இருப்பது மிகவும் கஷ்டத்தைக் கொடுக்கும். கூடிய வரையிலும் பிரும்மஸ்தானம் காலியாக இருத்தல் மிகவும் நல்லது.
பிரும்மஸ்தானத்தில் பூஜைகள் நடத்தலாம். ஆன்மீகக் கூட்டம் வைக்கலாம். பஜன் அல்லது வேறு நல்ல கருத்துள்ள கூட்டம் நடத்தலாம். நம் உடலுக்கு இருதயம் எத்தனை முக்கியமோ, அத்தனை முக்கியம் பிரும்மஸ்தானம். இதயத்தின் துடிப்பு ஒரே சீராக இருக்க ஆரோக்கியம் தான்; இல்லாவிட்டால் உடலுக்கு ரோகம் தான். அதே போல் வீட்டின் பிரும்மஸ்தானம் கெட்டால், வீட்டின் நிம்மதி குலைந்து விடும். இதே நிலைமை தான் தொழிற்சாலைக்கும். வீடு கட்டிக்கொள்பவர்கள் பிருமஸ்தானத்தில் கவனம் செலுத்தி அமைதியையும் மகிழ்ச்சியையும் பெற வேண்டும்.
(தொடரும்....
=============================================
வாஸ்து தொடர்பான உங்கள் கேள்விகள் / ஐயங்களுக்கு விசாலம் பதில் அளிப்பார். உங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி: tamileditor@chennaionline.com
Sep 16, 2009
* Do not use semicolon(;)