
விசாலம்
சிலர் மனையைத் தேர்ந்தெடுக்க மிகவும் அவசரம் காட்டுவார்கள். குறைந்த விலைக்கு வந்துள்ளது. இந்தச் சந்தர்ப்பம் விட்டால் பின் கிடைக்காமல் போய் விடும் என்று விசாரிக்காமல் வாங்குபவர்களும் உண்டு.
மனையைத் தேர்ந்தெடுப்பதில் அவசரம் காட்டலாகாது. ஒரு இடம் மிகவும் குறைந்த விலையில் வந்திருக்கிறது என்றால் அங்கு முன் குடியிருந்தவர்களில் யாராவது தற்கொலையில் இறந்திருக்கலாம். அல்லது அங்கு மழைக் காலத்தில் நீர் தேங்கி பிரச்சனை கொடுக்கலாம். வெகுதூரத்தில் பஸ் ஸ்டாப், மற்ற வாகன வசதிகள் இருக்கலாம். அருகில் சுடுகாடு இருக்கலாம்.... இப்படிப் பல விதமான காரணங்கள் இருக்கக்கூடும்.
அதைத் தேர்ந்தெடுக்குமுன் அந்த இடத்தின் வாஸ்து பார்க்க வேண்டும். பின் கட்டடம் கட்டும் போதும் வாஸ்து பார்க்க வேண்டும். இந்தக் காலக்கட்டத்தில் தனித் தனி வீடுகள் பல மறைந்து பல அடுக்குமாடிக் கட்டடங்கள் வெகு வேகமாக வந்துகொண்டிருக்கின்றன. இப்படி இருக்கும் போது அடுக்கு மாடி கட்டடங்களில் வாஸ்து பார்த்து அமைப்பது சற்று சிரமம் தான்.
அதில் ஒரு பக்கம் வசிப்பவர்களுக்கு வாஸ்து சிறப்பாகவும் மறுபக்கம் வசிப்பவர்களுக்கு எல்லாம் மாறிப்போகும் நிலையும் ஏற்படலாம். உதாரணமாக ஒருவருக்குத் தென் கிழக்கில் கிச்சன் இருந்தால் அதற்கு மறுபக்கத்தில் வடகிழக்கில் கிச்சன் வந்துவிடும். ஏன் என்றால் எல்லா வீடுகளின் வரைபடம் ஒன்றாக இருக்க வேண்டும். வெகு சில இடங்களில் தான் உள்பக்கம் வசிப்பவர் இஷ்டப்படி அமைத்துக்கொள்ள அனுமதி கிடைக்கிறது. ஆனால் முக்கால்வாசி இடத்தில் இந்தப் பிரச்சினை இருந்துதான் வருகிறது.
விவசாயி தான் ஒரு நிலத்தின் சொந்தக்காரன். அவனுக்கு அந்த நிலத்தைப் பற்றி எல்லாம் தெரியும். அவன் அந்த இடத்தில் நல்ல விதையைத்தான் விதைப்பான். ஏன் என்றால் அப்போதுதான் நல்ல விளைச்சலை அவன் எதிர்பார்க்க முடியும் இதேபோல் தான் வீடும். நல்ல விதையைப் போல் வீடும் அமைய வேண்டும். வீட்டில் நிம்மதி மிகவும் முக்கியம்.
நல்ல வீடு அமைய ஜாதகத்தில் நாலாம் இடம் வலுப் பெற்றிருக்க வேண்டும். அந்த இடம் நன்கு அமைந்தால் வீடு நம்மைத் தேடி வரும். நிலம் வாங்கும் முன் அங்கிருக்கும் சூழ்நிலையைக் கவனிப்பது மிக அவசியம்.
அந்த இடம், மேடு பள்ளமில்லாமல் சம்மாக இருக்க வேண்டும். கோயிலுக்கு எதிரிலேயே இருக்கக் கூடாது. கொஞ்சம் தள்ளி இருக்க வேண்டும். ஏன் என்றால் கோயில் கோபுரத்தின் நிழல் கட்டடம் மேல் விழக்கூடாது என்கிறது வாஸ்து சாஸ்திரம்.
ஆறு, வாய்க்கால், குளம், ஏரி, கிணறு ஆகியவை மனையின் வடக்குப் பக்கம் இருந்தால் மிகவும் நல்லது. தெற்குப் பக்கம் இவை இருப்பது நல்லதல்ல.
(தொடரும்....
=============================================
வாஸ்து தொடர்பான உங்கள் கேள்விகள் / ஐயங்களுக்கு விசாலம் பதில் அளிப்பார். உங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி: tamileditor@chennaionline.com
Aug 14, 2009
* Do not use semicolon(;)