முதுமையில் வேலையிலிருந்து ஓய்வு பெறுவதென்பது ஒரு அவசியம். எல்லோருக்கும் ஓய்வூதியம் கிடைக்கிறது என்ற நியதி கிடையாது. பல தனியார் நிறுவனங்களில் இத்தகைய சலுகைகள் கிடையாது. எல்லா முதியவர்களும், அதாவது, ஆண்டு 2000க்கு முன்பு வரையிலான காலத்தில் ஓய்வு பெற்ற நடுத்தர வகுப்பு முதியவர்கள் வாழ்க்கையில் சேமிப்பு என்பது இக்காலக் கட்டத்தில் இருப்பது போல் லட்சக் கணக்கில் கிடையாது.
அவர்கள் ஓய்வு பெற்ற நிலையை உணர்ந்து அடுத்த நிலைக்கு மனதளவில், உடலளவில் தயார் செய்துகொள்ள நீண்ட கால அவகாசம் தேவைப்படும். பலர் அலுவலக நாட்களையும் அங்கு நடந்த நிகழ்வுகளையும் பலப் பல ஆண்டுகளுக்குச் சொல்லிச் சொல்லி அசை போட்டுக்கொண்டிருப்பர். சில சமயங்களில் பலருக்கும், ஏன், குடும்பத்தினருக்கும் கூட பிடிக்காமல் போவதுண்டு.
மூப்பு வரும்பொழுதே, நாங்களும் உடன் பிறப்புகளே என்று நோய்கள் ஒன்றன் பின் ஒன்றாகத் தலைதூக்க ஆரம்பிக்கின்றன. மருந்து மாத்திரை செலவுகள். முடி திருத்தம் முதலிய பல தனிப்பட்ட தேவைகள்.
குடும்பத் தலைவனாகப் பணிசெய்துகொண்டு தன்னிச்சையாக வாழ்க்கை நடத்தியதற்கும் ஓய்வு பெற்ற முதியவராக வீட்டில் இருப்பதற்கும் வேறுபாடுகள் நிறைய இருப்பதாக மனதளவில் தோன்றும். கணவன் அல்லது மனைவி, பிள்ளைகள், மருமகள்கள் பேசிக்கொள்ளும் பொழுதும், இதர நிகழ்வுகளும் தன்னைச் சார்ந்ததாக இருக்குமோ என்பது போன்ற ஒரு தாழ்வு மனப்பான்மையும் சந்தேகங்களும் ஏற்படலாம்.
முதியவர்கள் பார்க்கும் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இளைய தலைமுறைக்கும், அவர்கள் பார்க்க விரும்புவது இவர்களுக்கும் பிடிக்காமல் இருக்கும். ரசனைகள் வித்தியாசப்படும். கேட்கும் ஒலி அளவிலும்கூட வித்தியாசங்கள் இருக்கும்.
சில சமூக, குடும்ப நிகழ்ச்சிகளுக்கு எல்லோரும் போகவேண்டிய கட்டாயம் இல்லை. அந்தச் சமயங்களில் தங்களை ஒதுக்குகிறார்களோ என்று முதியவர்களுக்கும் முதியவர்கள் தனியாகச் செல்லும் நேரங்களில், “இந்த வயதில் இவர்களுக்கு இருக்கும் ஆசை... அடேயப்பா.........” என்று இளையவர்கள் எண்ணக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும்.
இப்படியெல்லாம் இல்லாமல் இருக்கும் முதியவர்களுக்கும் இளையவர்களுக்கும் வாழ்த்துகள் - நீங்கள் விபரம் அறிந்தவர்கள், மனத் தத்துவம் புரிந்தவர்கள். இருந்தால், தவிர்க்கக் கூடியவை, தவிர்க்க வேண்டியவை. எப்படி? சில ஆலோசனைகள்.
ஓய்வூதியமோ, வட்டி போன்ற வருமானமோ இல்லா முதிய பெற்றோர்களுக்கு மாதா மாதம், சுயச் செலவிற்காக (இருந்தாலும் இல்லாவிட்டாலும் கூட) அவர்கள் விரும்பும் ஒரு தொகையைக் கொடுக்கலாம்.
அவர்கள் உடல்நலம் பற்றி அக்கறை கொண்டு அடிக்கடி விசாரித்து ஆவன செய்யலாம். மருந்து மாத்திரைகள் தேவைப்படும் அளவிற்கு எப்பொழுதும் இருக்கும்படி செய்யலாம். மற்றபடி அவர்கள் விரும்பும் பொருட்கள், உடைகள் உட்பட அவ்வப்பொழுது கேட்டு வாங்கிக் கொடுக்கலாம்.
அவர்களுடன் கலந்து உரையாடலாம், எண்ணங்கள் பரிமாறிக்கொள்ளலாம், அனுபவ முத்திரை உள்ள அவர்களிடமிருந்து யோசனைகள் கேட்கலாம், நகைச்சுவைகள் சொல்லி இன்புறலாம். எப்பொழுதும் அன்பாக இருக்கலாம்.
தொலைக்காட்சிப் பெட்டிகள் இப்பொழுதெல்லாம் மலிவு விலைகளில் கிடைக்கின்றன. சிறிய அளவு பெட்டி ஒன்று அவர்கள் விரும்பும் நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்குத் தேவைப்பட்டால் வாங்கிக் கொடுக்கலாம்.
“நீங்கள் தான் வேலைக்குப் போவதில்லையே, இதெல்லாம் உங்களுக்கு எதற்கு?” என்பன போன்ற சொற்களைச் சொல்லக் கூடாது.
சுருக்கமாக முதியவர்களுக்கு மன வருத்தமோ, தாங்கள் இவர்களுக்குப் பாரமாக இருக்கிறோமோ என்பது போன்ற எண்ணங்கள் ஒருபொழுதும் தோன்றாமல் நடந்துகொள்வது மிக அவசியம். நான் சொல்வதெல்லாம் ஒரு வழிப்பாதை மட்டும் இல்லை. முதியவர்களும் அநாவசியமாகக் குழம்பிக் கொள்ளாமலும், குழப்பாமலும் இருக்கவேண்டும்.
முதுமையும் அப்பொழுது ஓய்வுக் காலம் என்பதும் ஒரு இயற்கை. அதைப் புரிந்துகொண்டு, தாங்கள் இளமையாக இருந்தபொழுது இருந்த எதிர்பார்ப்புகள், கனவுகள் அத்தனையும், ஏன், அதற்கு மேலாகவும் தங்கள் இளைய தலைமுறையினருக்கு இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.
அவர்கள் செல்லும் இடங்களுக்கு நீங்கள் போகவேண்டும், நீங்கள் செல்லும் இடங்களுக்கு அவர்கள் வரவேண்டும், நீங்கள் எண்ணியபடி, சொன்னபடி தான் எல்லாம் நடக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் வைத்துக் கொள்ளாதீர்கள். நடந்தாலும் நடக்காவிட்டாலும் மகிழ்வுடன் இருங்கள்.
உடல் நலம் ஒத்துழைத்தால், பகுதி நேரமாகவோ, முழு நேரமாகவோ தகுதிக்கேற்ற வேலைக்குப் போவதில் தவறொன்றுமில்லை. உங்கள் பிள்ளைகள் தானே? அவர்கள் வேலைப் பளுவிலும், குடும்பக் கவலைகளிலும் மூழ்கியிருக்கலாம். உங்களுக்கு என்ன தேவைப்பட்டாலும், அவர்களிடம் உங்கள் தேவைகளை விளக்கிப் பூர்த்தி செய்துகொள்ளுங்களேன். அப்பொழுது இருவருக்கும் ஏற்படும் மகிழ்ச்சியில் நெகிழ்ந்துபோவீர்கள்.
அவர்கள் நலனில் எப்பொழுதும் போல் அக்கறையுடன் விசாரித்து ஆவன செய்ய முற்படுங்கள். ஆனால், உங்கள் காலக் கட்டத்திற்கும் அவர்கள் காலக் கட்டத்திற்கும், அப்பொழுதைய வசதி வாய்ப்புகளுக்கும், அவர்கள் கால வசதி வாய்ப்புகளுக்கும் உள்ள பெரிய இடைவெளியை உணருங்கள். அனுபவ புத்திமதிகள் ஏற்புடையதாகவும் காலத்திற்குப் பொருந்தும் வகையாக இருந்தால் மட்டுமே அவர்கள் ஏற்றுக்கொள்ளக் கூடும். ஏற்றுக்கொள்ள முடியாத நிலை இருந்தால், அதற்காக மனத் தளர்ச்சி கொள்ளாதீர்கள்.
இரு தலைமுறைகளுக்கு இடையே ஒரு இடைவெளி என்பது எப்பொழுதும் உண்டு. இருந்தாலும், பெரியவர்களுக்குச் சிறியவர்களின் அரவணைப்பும் ஆதரவும் சிறியவர்களுக்கு பெரியவர்களின் அன்பு ஆசிகளும் ஆலோசனைகளும் தேவைப்பட்டுக்கொண்டுதான் இருக்கும்.
சுருக்கமாக, ஒரு காலத்தில் பச்சை இலையாக இருந்த முதியவர்கள், ஓய்வு காலம் வரும்பொழுது பழுத்த இலை என்பதையும், அதே போல் இளைஞர்கள், பச்சை இலையாக இருந்தாலும், பழுத்த இலையாக மாறிக்கொண்டிருப்பவர்கள் என்பதையும் புரிந்து நடந்து கொள்ளுங்கள்.
எவ்வித எதிர்பார்ப்புகளும் மனக் கசப்புகளும் வருத்தங்களுமோ இல்லாமல் அன்புடன் மனம் விட்டு பேசி, பிரச்சினைகள் உண்டாகாத வகையில் நடந்துகொள்ளுங்கள். வாழ்க்கைப் பயணம் எல்லோருக்கும் இனிதே அமையும்.
Oct 14, 2009
* Do not use semicolon(;)