
புரட்சிக் கவிஞரின் தேசிய உணர்வைப் புலப்படுத்தும் நூலே 'கதர் இராட்டினப் பாட்டு'. நாட்டு விடுதலையில் நாட்டம் கொண்டு, பாட்டால் உணர்வூட்டிய பாரதியைப் போன்று, பாவேந்தரும் விடுதலைக்கு வித்திட்ட வீரக் கவிஞர் என்பதற்குச் இந்த நூல், ஒரு வலுவான சான்று.
இந்த நூலுக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. 'பாரதிதாசன்' என்ற புனைபெயரோடு வெளியான முதல் நூல் இதுவாகத்தான் இருக்க வேண்டும். ஏனெனில் அதற்கு முன்பு வரை கவிஞர் வெளியிட்ட 'சுப்ரமண்யம் திதியமுதில்' ஆசிரியரின் பெயர் 'கனக சுப்புரத்தினம்' என்றே குறிப்பிட்டிருக்க, இந்த நூலில்தான் 'பாரதிதாசன்' என்ற பெயரை நாம் காண்கிறோம்.
அளவில் சிறியதானாலும் ஆழ்ந்த செறிவுடையது.. தேசீய உணர்வினை ஊட்ட வல்லது. அதனால்தான் அரசினரும் 1930இல் வெளிவந்த இந்த நூலைத் தடை செய்திருக்கிறார்கள். பிறகு 1950இல் திருச்சி நாவலர் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது. அதன் பிறகே 'கதர் இராட்டினப் பாட்டு' என்னும் இந்த நூல், மக்களின் கவனத்தைக் கவர்ந்தது.
ஜன்ம பூமியின் சிறப்பு
காந்தியடிகளும் கதரும்
சுதந்திரதேவியும் கதரும்
தேசத்தாரின் பிரதான வேலை
இராட்டினச் சிறப்பு
அன்னையின் ஆடை
பாரத தேவி வாழ்த்து
இப்படி ஏழு தலைப்புகளில் இந்த நூலின் பாடல்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு பாடலிலும் அதன் ராகம், தாளம் போன்ற குறிப்புகள் உள்ளன. இசையோடு பாட ஏற்புடைய பாடல்கள்!
பாரததேவியைப் பாடும்போது,
"விண்கொள் இமயமாம் வெற்பே திருமுடியாய்ப்
பண்கொள் குமரி பணிதாளாய் - மண்கொள்
வளமே தன் மேனியாய் வாய்ந்த'தாய்' வீரர்
உளமே தன் மேனிக்குவப்பு"
என்கிறார் பாரதிதாசன்.
பாரததேவியை ஒரு தாயாக உருவகித்து, அத்தாயின் திருமுடியாய் இமயத்தையும், திருவடிகளாய்க் குமரியையும் குறிபிட்டிருப்பது, கவிஞரின் ஒருமைப்பாட்டு உள்ளத்துக்குச் சான்றாக விளங்குகிறது.
"இன்னல் செய்தார்க்கு இடர்செய்திடாமல்
இராட்டினம் சுற்றென்று சொல்லும் - எங்கள்
ஏதமில் காந்தியடிகள் அறச்செயல்
வெல்லும்-வெல்லும்-வெல்லும்!"
என்கிறார் 'காந்தியடிகளும் கதரும்' என்ற பாடலில்.
"கதரணிவீர் என்றுரைத்த
காந்தியண்ணல் ஆணை- எழிற்
காந்தியண்ணல் ஆணை-அதைக்
கருதிடுவீர் அது உமக்கு நாரதனார் வீணை"
என்று காந்தியடிகளின் கொளகையைப் போற்றுகிறார்.
"மாதர்க்குண்டு சுதந்திரம் என்று நின்
வண்ணமலர்த்திரு வாயின் மொழிந்த சொல்
நாதந்தானது நாரதர் வீணையோ?"
என்ற பாரதியின் பெண்ணுரிமைக்காகப் பேசப்பட்ட சொற்கள். 'நாரதரின் வீணை' என்ற சொல்லையே பாரதிதாசனும் கதரணீவீர் என்று காந்தியடிகளின் ஆணையை நாரதரின் வீணையாகக் குறிப்பிட்டிருப்பது நாம் நினைத்து இன்புறத்தக்கது.
தேசிய உணர்வோடு இலக்கிய இன்பமும் ஊட்டும் இனிய நூலே 'கதர் இராட்டினப் பாட்டு!'
சுதந்திரத் திருநாளில் இதனை நாம் நினைவுகூர்ந்து மகிழ்வோம்!
ஜெய்ஹிந்த்!
Aug 14, 2009
* Do not use semicolon(;)