அக்டோபர் 2009
அன்புள்ள மனைவி பத்மாவுக்கு,
இன்று முகச்சவரம், குளியல் கிடையாது. காரணம் மூன்று நாட்களாக மூக்கிலிருந்து ப்ரவாகம்; வீரப்பனிடம் சிக்கிய பணயக் கைதி மாதிரி எப்போதும் ஒரு படபடப்பு; வெப்பம்.
பக்கத்து அறையில் இருப்பார் மெடிகல் ரெப்ரஸெண்டேடிவ்; நமக்கு ஒத்தாசையாக ஏதாவது செய்வார். 'சளியைக் கரைத்து விடும்' என்று சொல்லி மருந்து கொடுத்தார். அதுதான் ஏற்கெனவே பெருகிக் கொண்டிருக்கிறதே என்று அவர் காதில் படாமல் முனகினேன். மருத்துவர்களிடமும் மருத்துவப் பிரதிநிதிகளோடும் ஒருவகையான தகவல் தொடர்புதான் சாத்தியம். அவர்கள் கேள்வி கேட்கும்போது மட்டும் நாம் பதில் சொல்ல்லாம். மற்றபடி நாம் ஏதாவது சொல்ல முயற்சி செய்தால் இதுதான் ஏற்கெனவே தெரியுமே என்ற நினைப்பில் இருப்பார்கள். முட்டை இடுகிற கோழிக்குத்தான் மூலாதாரத்தைப் பற்றித் தெரியும் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. ஏகப்பட்ட ஒயர்களை உடம்பில் பொருத்தி, கணினி வழி காமிராக்களால் குறுக்கு நெடுக்காகப் படம் எடுத்து, நவத்வார வெளியேற்றங்களையும் மின்சார அடுப்பில் ஏற்றி, மொத்தத்தில் நம்முடைய பிரச்சினையைப் பற்றி நாம் பேச முடியாது.
நண்பர் கொடுத்து நொச்சித் தைலமும், மாவுப் பண்டம்போல இரண்டு வகையான மாத்திரைகளும். வாரத்திற்கு இரு முறை தைலத்தைத் தலையில் தேய்த்துக் குளிக்க வேண்டும். அரப்புப் பொடியும் அருமைத் துணைவியும் இல்லாமல் எண்ணெய்க் குளியல் எப்படி என்று தயங்கினேன். பிறகு விபரீத எண்ணங்களுக்கு விடை கொடுத்துவிட்டு ஷாம்புவைத் துணைக்கு வைத்துக்கொண்டேன்.
மாவுப் பண்டமான மாத்திரைகள், உணவுக் குழாயின் உள்ளே போனவுடன் பல்கிப் பெருகி விடுவதால் பசி குறைந்து, ஓட்டல் பில்லும் குறைந்து விடுகிறது.
மற்றபடி மதுரை நனைந்திருக்கிறது; தொடர்ந்து, தூறல் மழை. வெளியே போக முடியாததால் எதிர்ப்பக்கம் உள்ள அறையில் டிவி பார்த்தேன் – ஜிடிவி. சத்ருகன் சின்ஹா யாரோ ஒரு ஓவர் சைஸ் குண்டனோடு மோதிக் கொண்டிருக்கிறார். சண்டைக் காட்சிகளைப் புரிந்துகொள்ள இந்தி அவசியமில்லை என்பதை உனக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். இன்னொரு பிரச்சினை உருவாகிவிட்டது. பார்த்தோமா, ரசித்தோமா என்று நம்மால் இருக்க முடியாது – சண்டையைப் பற்றிய சந்தேகங்கள். ஏன் சினிமாவில் வரும் சண்டைக் காட்சிகளில் எல்லோரும் கோட், சூட், ஜெர்கின் போட்டுக்கொண்டு வருகிறார்கள் என்று தெரியவில்லை.
ஜெமினியின் 'ஒளி விளக்கு' திரைப்படம்; சௌகார் ஜானகியைக் கற்பழிக்க வில்லன் முயற்சி செய்வான். காப்பாற்ற வருவார் எம்.ஜி.ஆர். கண்ணாடியை உடைத்துக்கொண்டு அவர் குதிக்கும் போது கூட டையோடு கூடிய கோட், சூட்தான். சண்டை மட்டுமில்லை, பொதுவாகவே சினிமா பற்றிய சில சந்தேகங்கள் நம்மோடு ஜென்மாந்திரமாகத் தொடர்கின்றன. உன்னை சாட்சியாக வைத்துக்கொண்டு தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு என்னுடைய ஐயப்பாடுகளை அறிவிக்கிறேன்.
1. சாவுக் காட்சி அல்லது திவசக் காட்சியில் ஓயாது மழை கொட்டிக்கொண்டே இருக்கிறது. வெயில் மண்டையைப் பிளக்கும் காலத்தில் யாருமே மண்டையைப் போடுவது இல்லையா?
2. பாசமலர் முதல் படையப்பா வரை கதாநாயகனின் தங்கையைக் காதலிப்பவன் எதிர்க்கட்சியில் சேர்ந்து விடுகிறானே, அது ஏன்?
3. தலை தெறிக்கும் வேகத்தில் ஒன்றை ஒன்று துரத்திச் செல்லும் காட்சிகளில் குதிரை வீரன், மோட்டார் காரை முந்தி விடுகிறானே அது எப்படி?
4. சிம்ரன் முதல் ஸ்ரேயா வரை இடுப்பு இருக்கும் போது நடிப்பு எதற்கு என்று காட்சிப்படுத்துகிறார்களே, அது யாருக்காக?
5. ஊர் உலகத்தில் எங்குமே பயன்பாட்டில் இல்லாத சாரட் வண்டியில் பண்ணையார்கள் பயணம் போகிறார்களே. அது எதற்காக?
6. தில்லானா மோகனாம்பாள் முதல் அன்பே சிவம் வரை கதாநாயகன் ஆஸ்பத்திரியில் இருக்கும் போது அன்போடு கவனித்துக்கொள்பவர்கள் கிருத்துவர்களாகவே இருக்கிறார்களே, அது எப்படி?
இந்தப் பட்டியல் இறுதியானது அல்ல. நீயும் உன் பங்கிற்கு ஒன்றிரண்டு சேர்க்கலாம்.
அன்புடன்
சுப்பு
Oct 22, 2009
* Do not use semicolon(;)