சமயோஜிதம்
1) நான் முன்பு வேலை பார்த்த மும்பை நிறுவன முதலாளி மிக நல்லவர். ஒரு நாள், (சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்), என் சக அதிகாரி ஒருவர் எங்கள் தொழிற்சாலை இருக்கும் வேறு ஒரு ஊருக்கு செல்லவேண்டி இருந்தது. அலுவலக இருப்பிடத்திலிருந்து மற்றுமொரு லோக்கல் ரயில் நிலையத்திற்குச் சென்று அங்கிருந்து வேறொரு ஊருக்குச் செல்லவேண்டும். அவர்கள் அலுவலகத்திலிருந்து பிற்பகல் 3 மணிக்குக் கிளம்பினார்கள். அவர்கள் பிடிக்க வேண்டிய ரயில் மாலை 5 மணியளவில் கிளம்பும். சுமார் 4 மணியளவில் எங்கள் முதலாளி என்னிடம் வந்து, அவர்கள் கிளம்பிவிட்டார்களா என்று கேட்டார். நான் அதற்கு அவர்கள் ரயில் நிலையத்தை 15 நிமிடங்களில் அடைந்துவிடுவார்கள் என்றேன். அவர்கள் செல்ல வேண்டியதில்லை; ஆகவே உடன் அவர்களைத் திரும்ப அலுவலகத்திற்கு எப்படியாவது வரச் செய்ய நடவடிக்கை எடுக்கச் சொல்லி ஆணையிட்டார்.
இருப்பதோ இன்னும் 1 மணி நேரம் தான். யாராவது சிப்பந்தியை அனுப்பலாமென்றால் அதற்கெல்லாம் நேரமில்லை. அப்பொழுதெல்லாம் கைப்பேசி வசதியெல்லாம் கிடையாது. ஒரு எண்ணப் பொறி ஏற்பட்டது. உடன் அந்த ரயில் நிலைய அதிகாரியைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். விஷயத்தை விளக்கி, பிரயாணி பெயர் சொல்லி ஒரு அவசர அழைப்பு, ஒலிபெருக்கியில் குறிப்பிட்ட ரயில் கிளம்பும் பிளாட்பாரத்தில் அறிவிக்கும்படி கேட்டுக்கொண்டேன். 5 மணிக்கு நண்பர்கள் அலுவலத்திற்கு திரும்பிவிட்டனர். எனக்கும் எங்கள் முதலாளிக்கும் ஆச்சரியம். சமயோஜிதமாக உடன் செயல்பட்டதற்குப் பாராட்டு கிடைத்தது.
2) எங்கள் மகனுக்கு பெண் தேடிய சமயம். எங்கள் சகோதரி கணவர் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்ணைப் பார்ப்பதற்காக நாங்கள் திருச்சிக்கு வந்தோம். எங்கள் மகன் அயல்நாட்டில் இருந்த காரணத்தால், நாங்கள் பார்த்துத் தேர்ந்தெடுத்தால் போதும் என்று சொல்லிவிட்டான். அன்று மாலை, என் மனைவியிடம் பெண் பிடித்திருந்தால் நாங்கள் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொள்வது, இல்லாவிட்டால் வேறு ஒரு சங்கேதத்தில் தெரிவிப்பதாகப் பேசி வைத்திருந்தோம். பெண்ணைப் பிடித்துவிட்டது, நாங்கள் இருவரும் பார்வையிலாயே ஒப்புதல் தெரிவித்துக்கொண்டோம். பையன் போட்டோவை மட்டும் பார்த்திருந்த அந்தப் பெண்ணிடம் அவள் பூரண சம்மதத்தைக் கேட்க எண்ணிய எங்களிடம், 'அம்மா, அப்பா, டிபன் சாப்பிடுங்கள்' என்று புன்முறுவல் பூத்தவண்ணம் சம்மதம் என்று சொல்லாமல் குறிப்பறிவித்த அந்த சமயோஜிதம் எங்கள் பாராட்டுதலைப் பெற்றதோடு, அவளையே எங்கள் மருமகளாக்கிக் கொள்ளவும் வைத்தது.
நுகர்வோர் சட்டப் பாதுகாப்பு வசதி
பொதுமக்கள் பாதுகாப்புக்காகவே ஏற்படுத்தப்பட்ட இம்மாதிரியான சட்ட வசதிகள் பெரும்பாலும் எவரும் உணர்வதில்லை. உணர்ந்தவர்கள், அவற்றைப் பயன்படுத்துவதில்லை. அதற்குப் போதிய நியாயமான, உண்மையான எழுத்து மூல ஆதாரங்கள் சேகரித்து வைப்பது அவசியம். என் அனுபவங்கள்.
1) நாங்கள் வாங்கிய குளிர் சாதனப் பெட்டி (பெயர் பெற்ற நிர்வாகத் தயாரிப்புதான்) வாங்கிய நாள் முதலே வேலை செய்யவில்லை. வாங்கிய கடையைக் கேட்டால், நிர்வாகத் தொலைபேசி எண்ணைக் கொடுத்து தொடர்புகொள்ளச் சொல்லி, கை கழுவிவிட்டனர். தொடர்பு கொண்ட பின், ஒரு வாரம் கழித்து, பழுது பார்த்துத் தருவதாகச் சொன்னார்கள். எனக்கு ஏற்பட்ட வருத்தமும் கோபமும் சொல்லி மாளாது. யோசனை செய்து பார்த்தேன். நுகர்வோர் அமைப்பு நினைவிற்கு வந்தது. எழுத்து மூலம் ஆதாரம் திரட்ட வேண்டி, நிர்வாகத்திற்கு நடந்ததைக் கூறிக் கடிதம் எழுதினேன். மன்னிப்பு கோரி ஆவன செய்வதாகச் சொல்லிப் பதில் வந்தும் ஏதும் செய்யவில்லை.
மீண்டும் சற்று கடுமையாக எழுதி, எனக்குப் புதியதான வேறு ஒரு பெட்டி தரவேண்டும், கால தாமத நாட்களைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றாற் போல், உத்திரவாத தேதியையும் தள்ளிப் போட வேண்டும், தவறினால், நுகர்வோர் அமைப்பில் வழக்கு செய்து நஷ்ட ஈடு கோருவேன் என்று பதிவுத் தபால் போட்டேன். அதன்பின், நிர்வாகத்தினர் திருப்திகரமான வகையில் செய்து முடித்தனர்.
2) ஆயுள் பாதுகாப்பு பாலிசி ஒன்று முடியும் தறுவாயில் அறிவிப்பு வந்தது. அதில் தொகை எப்படி அனுப்பவேண்டுமென்று கேள்விகள். அவர்கள் விருப்பப்படி அனுப்புவதென்றால் கேள்விகள் தேவையில்லை. எனக்கு என் மும்பை வங்கி கணக்கில் செலுத்தும்படியான டிராப்ட் தேவை என்று விபரங்கள் எழுதியிருந்தேன். ஒரு மாத காலம் கழித்து நான் கேட்டதற்கு மாறாகத் காசோலை வந்தது. நான் திருப்பி அனுப்பி என் தேவையை மீண்டும் தெரிவித்து, அவர்கள் தவறையும் கால தாமதத்தையும் சுட்டிக் காட்டி, பதிவுத் தபாலில் கடிதம் எழுதினேன். மீண்டும் ஒரு மாத கால தாமதத்திற்குப் பின் டிராப்ட் வந்தது. ஆனால், மும்பை புறநகர் பெயருக்குப் பதில் ராஜஸ்தான் மாகாணத்தின் ஒரு நகரின் வங்கிக் கிளையின் பெயரில் வந்தது.
பதிவுத் தபாலில் இதனால், எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலையும், காலத்தில் கிடைக்கவேண்டிய பணம் கிடைக்காததால் ஏற்பட்ட நஷ்டத்தையும் தெரிவித்து, நுகர்வோர் அமைப்பில் வழக்கு பதியப் போவதாகத் தெரிவித்தேன். ஆறு மாதத் தாமதத்திற்குப் பின், பணம் கேட்டவண்ணம் கிடைத்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வழக்குப் பதியும் என் உரிமையையும் பதிவு செய்து, பணத்தை வாங்கிக்கொண்டு, வழக்கு தொடுத்தேன். வழக்கு விசாரணையில், அவர்கள் தவற்றை ஒத்துக்கொண்டு எனக்கு ஓரளவு நஷ்ட ஈடும் கொடுத்தார்கள்.
Nov 06, 2009
* Do not use semicolon(;)