
மும்பை, நவ.3 (டிஎன்எஸ்)
சிறந்த மருத்துவ வசதி பெறுவதற்கு கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில், தமிழகத்தில் அகதிகளாக உள்ள இலங்கைத் தமிழ் குடும்பங்களும் பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கையில் எண்பதுகளில் ஏற்பட்ட கலவரங்களைத் தொடர்ந்து இன்று வரையில் உயிர் பிழைக்கவும், அமைதியான வாழ்வுக்காகவும் உன்னதமான அனைத்தையும் இழந்து வரத் தொடங்கிய லட்சக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் கடந்த கால் நூற்றாண்டு காலமாக தமிழகத்தில் வாழ்ந்து வருகிறார்கள்.
இவர்களில் சுமார் ஒரு லட்சம் பேர் அகதி முகாம்களில் அல்லலுற்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வாழ்வதற்குரிய அடிப்படை ஆதாரங்கள், வசதிகள் எதுவுமின்றி அகதிகளாக இன்னும் எத்தனை ஆண்டு காலம் வாழ்ந்து வர வேண்டுமோ அது யாருக்கும் தெரியாது.
அங்கே போர் முடிவுக்கு வந்து விட்டது என்று சொல்லப்பட்டாலும், பெரிய அளவிலான சமாதானமும், அதனால் இணக்கமான வாழ்வும் அங்கே இல்லை. போர் இல்லை; அவ்வளவு தானே தவிர, தமிழர்கள் இன்றைக்கும் அச்ச உணர்வோடு தான் வாழ்ந்து வரவேண்டிய நிலைமை இருந்து கொண்டிருக்கிறது.
எனவே, தமிழகத்திற்கு வந்துள்ள இலங்கைத் தமிழர்கள் அங்கே திரும்பிச் செல்வதும், அவர்களை இங்கிருந்து அனுப்புவதும் அவர்களுக்குப் பாதகமாகவே அமையும். இந்த நிலையில் இங்கே அகதிகளாக வாழ்ந்து கொண்டிருப்போரின் இழிந்த வாழ்வைப் போக்குவதற்கு பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஈழத் தமிழர்களுக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்ற நிர்ப்பந்த உணர்வில் இந்த நடவடிக்கைகள் அமைந்துவிடக் கூடாது. அவர்களுக்கு என்ன தேவை? என்பதை அவர்களது பிரதிநிதிகளை அழைத்து தெரிந்து கொள்ள வேண்டும். அமைச்சர்கள் ஏற்கெனவே இருமுறை அகதி முகாம்களைப் பார்த்து அறிக்கை கொடுத்திருக்கிறார்கள். ஆனாலும், நிலைமை முதலமைச்சரே வர்ணித்திருப்பதைப் போல நமதுகண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓட செய்வது போலத் தான் இருந்து கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் தங்கியிருக்கும் ஈழத் தமிழ் அகதிகளின் வாழ்க்கை நிலையை சுயமரியாதையான வாழ்வாக மாற்றி அதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தாங்கள் உயிர் பிழைக்க அனுமதி தந்துள்ள மண்ணில் அரசுக்கு எதிராக §போராடிப் பெற முடியாத நிலையில் அவர்கள் உள்ளனர். தங்களது பூமியில் என்றாவது ஒரு நாள் அமைதி திரும்பும் என்றநம்பிக்கையோடு வாழ்ந்து கொண்டிருக்கிற ஈழத் தமிழ் மக்களுக்கு வழங்கப்படும் மானியமும், உணவும் எதுவும் போதுமானதாக இல்லை.
இதனால், ஏழ்மையான துன்பமான வாழ்வையே அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த அவல நிலையைப் போக்க அவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து மானியங்களும் உயர்த்தப்பட வேண்டும். அவர்களின் சிவில், சமூகவாழ்வில் அனைத்து சுதந்திரங்களும் பேணப்பட வேண்டும். அவர்களின் கல்வி, பொருளாதார மேம்பாட்டிற்கு சிறப்பு நிதி உதவியுடன் தனி வாரியம் அமைக்க வேண்டும்.
தலாய்லாமாவின் தலைமையில் சீனாவிலிருந்து வெளியேறி இந்தியாவில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ள தீபெத்தியர்கள் நமது நாட்டின் எல்லாப் பகுதிகளிலும், அனைத்து சுதந்திரத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தமிழகத்திலும், ஈரோடு மாவட்டம் தாளவாடியையொட்டிய கர்நாடக எல்லைப் பகுதியில் தீபெத்திய அகதிகளுக்கான குடியிருப்பு ஒன்று இருக்கிறது. அங்கே அவர்கள் சொந்த வீடுகளில், ஆரோக்கியமான சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அந்த குடியிருப்புகளோடு ஒப்பிடுகையில், இலங்கைத் தமிழர்களின் அகதி முகாம்களில் உள்ள குடியிருப்புகள் மிகக் கொடுமையானவை. இலங்கைத் தமிழர்கள் வசித்து வருகிற அகதி முகாம்களுக்குச் சென்று பார்ப்பதைவிட, தீபெத்தியர்கள் வாழ்ந்து வரும் குடியிருப்புகளைப் பார்த்து அதற்கேற்ற வசதிகளை செய்து கொடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும். சமத்துவபுரங்கள் போன்று புதிய குடியிருப்புகளை அமைத்து இலங்கைத் தமிழ் அகதிகளை குடியமர்த்த வேண்டும்.
அடைக்கலம் கேட்டு புதிதாக வரும் இலங்கைத் தமிழர்களை 6 மாதங்களுக்கு மேல் முகாம்களில் அடைத்து வைக்காமல், இத்தகைய குடியிருப்புகளுக்கு மாற்ற வேண்டும். அனைவருக்கும் நிலையான குடியிருப்பு அடையாள அட்டைகளை வழங்க வேண்டும். திறமை, அனுபவம், முதலீட்டு வலிமை கொண்டோர் தொழில் தொடங்கவும், வங்கிக் கடன் பெறவும் சுதந்திரம் வழங்கப்பட வேண்டும்.
கல்வியில் இத்தனைக் காலம் இருந்து வரும் எல்லா சலுகைகளும் தொடர்ந்து நீடிக்கப்பட வேண்டும். வசதி குறைந்தவர்களுக்கு கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் ஆகியவற்றை அரசே செலுத்த வேண்டும். இலங்கைத் தமிழ் மக்களும், சிறந்த மருத்துவ வசதி பெறுவதற்கு கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் இலங்கைத் தமிழ் குடும்பங்களும் பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.
(டிஎன்எஸ்)
Nov 03, 2009
* Do not use semicolon(;)