
அபுதாபி, நவ.5 (டிஎன்எஸ்)
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், அப்ரிடியின் அதிரடி ஆட்டத்தால் பாகிஸ்தான் அணி 138 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடர் பொது இடமான அபுதாபியில் நடத்தப்படுகிறது. இதன் முதல் ஆட்டம் நேற்று முன்தினம் நடந்தது.
`டாஸ்' ஜெயித்த பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. ரன் கணக்கை தொடங்கும் முன்பே சல்மான்பட், கேப்டன் யூனிஸ்கான் ஆகியோரின் விக்கெட்டை இழந்து தவித்த பாகிஸ்தான் அணி, தொடக்க ஆட்டக்காரர் காலித் லத்தீப் (64 ரன்), மற்றும் முகமது யூசுப் (30 ரன்) ஆட்டத்தால் லேசாக நிமிர்ந்தது.
6அவது வீரராக களம் இறங்கிய அதிரடி ஆட்டக்காரர் அப்ரிடி, 7ஆவது வீரராக களம் கண்ட விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மல் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் பாகிஸ்தான் அணி சரிவில் இருந்து மீண்டது. அப்ரிடி 50 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் 70 ரன் குவித்து ஆட்டம் இழந்தார்.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் சேர்த்தது. விக்கெட் கீப்பர் கம்ரன் அக்மல் 43 பந்துகளில் 5 பவுண்டரி, 4 சிக்சருடன் 67 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி, பாகிஸ்தான் வீரர்களின் சிறப்பான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 39.2 ஓவர்களில் 149 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.
இதனால் பாகிஸ்தான் அணி 138 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி தரப்பில் உமர்குல், அப்துல் ரசாக், அப்ரிடி, சயீத் அஜ்மல் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள்.
அப்ரிடி ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2ஆவது ஒருநாள் போட்டி நவம்பர் 6ஆம் தேதி நடக்கிறது.
(டிஎன்எஸ்)
Nov 05, 2009
* Do not use semicolon(;)