
தமிழ் மரபு அறக்கட்டளை (http://www.tamilheritage.org) என்ற அமைப்பு, இந்தியாவிலும் இங்கிலாந்திலும் பதிவு பெற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம். ஆனால், இதன் நிறுவனர்கள் மூவர். மூவரும் கொரியா (முனைவர் நா.கண்ணன்), ஜெர்மனி (சுபாஷினி டிரெம்மல்), சுவிட்சர்லாந்து (முனைவர்.கு.கல்யாணசுந்தரம்) என வெவ்வேறு நாடுகளில் இருக்கின்றனர். இந்த அமைப்பானது, ஓலைச் சுவடிகள், பழமை வாய்ந்த நூல்கள் ஆகியவற்றை மின்னூல்களாக வெளியிடுகிறது; மரபுச் செழுமையை உணர்த்தும் இயல், இசை ஆகியவற்றின் ஒலி - ஒளிப் பதிவுகளை இணையத்தில் சேமிக்கிறது; மின் தமிழ் என்ற இணையக் குழுமத்தில் தமிழ் மின்பதிப்புகள் தொடர்பான விவாதங்களை வளர்க்கிறது. இந்த அமைப்பின் நிறுவனர்களுள் ஒருவரான சுபாஷினி டிரெம்மல், ஜெர்மனியில் வசிக்கிறார். Hewlett Packard நிறுவனத்தில் ஐடி கன்சல்டனாகப் பணிபுரியும் அவருடன் சென்னை ஆன்லைன் தமிழ்த் தளத்தின் ஆசிரியர் அண்ணாகண்ணன், மின் அரட்டை வழியே உரையாடினார். இந்த அமைப்பின் மின்னூலாக்க பணிகள் குறித்து இந்த உரையாடல் அமைந்தது. அந்த இ-நேர்காணல் வருமாறு:
'தமிழ் மரபு அறக்கட்டளை' சுபா உடன் இ-நேர்காணல் - முதல் பகுதி
அண்ணா: தமிழில் மின்னூல் உருவாக்கும் முயற்சியைத் தொடங்கியதன் நோக்கம் என்ன?
சுபா: பல அரிய தமிழ் நூல்கள் ஒரு முறை சுவடி நூல்களிலிருந்து அச்சுப் பதிப்பாகப் பதிப்பிக்கப்பட்ட பின்னர் மறுபதிப்பிற்கு வருவதில்லை. இப்படி பல நூல்கள் நாள் செல்லச் செல்ல மறக்கப்பட்ட ஒன்றாகிப் போவதோடு அழிந்தும் விடுகின்றன. இவை மின்னாக்கம் செய்யப்படும் போது பாதுகாக்கப்படுவதோடு பயன்பாட்டிற்கும் கிடைக்கின்றது.
இன்றைய நிலையில் தமிழ் மொழி அறிந்தோர் தமிழகத்திலும் இலங்கையிலும் மட்டுமே இருந்த நிலை மாறி, தற்போது உலகின் பல மூலைகளில் வாழ்கின்ற நிலை உள்ளது. இதனைக் கவனிக்கும் போது தமிழ் மக்களின் இரண்டாம், மூன்றாம் தலைமுறையினருக்கும் தமிழ் நூல்களை கிடைக்கச் செய்வது முக்கியமான ஒரு விஷயம். அதிலும் குறிப்பாக நூல்களை இணையத்தின் வழி வழங்குவது மிக முக்கியமான ஒரு செயல்.
அது மட்டுமல்லாமல் இணையம் நூல்களை நிரந்தரப்படுத்தும் வழிகளை நமக்குத் தந்திருக்கின்றது. இதனை நாம் பயன்படுத்திக் கொள்வது அவசியம் இல்லையா?
அண்ணா: நூல்களை இணையத்தில் நிரந்தரப்படுத்தல் என்பது மாயையோ என்ற ஐயம் ஏற்படுகிறது? நிரந்தரப்படுத்தும் நோக்கத்துடன் வந்த எவ்வளவோ இணைய தளங்கள் தடயமில்லாமல் அழிந்துள்ளதை அண்மைக் காலத்தில் நாம் பார்த்துள்ளோம்?
சுபா: எனக்கு அப்படித் தோன்றவில்லை. ஒரு நூலை நாம் microfilm தொழில்நுட்பம் வழியும், இணையத்தில் கிடைக்கினற பல்வேறு வகைகளிலும் நிச்சயமாக நிரந்தரப்படுத்தலாம். தொழில்நுட்பம் மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. அதில் சந்தேகமில்லை. தொழில்நுட்பம் மாறும் போது அதற்கேற்றாற் போல இந்த இணையப் பதிப்புகளையும் மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும். இது ஒரு சங்கிலித் தொடர் போன்ற முயற்சி. ஆனால் எந்த வகையிலுமே எந்த முயற்சியும் எடுக்காமல் இருந்துவிட்டால் பல சிறந்த நூல்களை நாம் இழக்க நேரிடும். ஏற்கெனவே பல ஓலைச் சுவடி நூல்கள் மற்றும் பல பழம் நூல்களை நாம் இப்படி இழந்திருக்கின்றோம். உதாரணமாக பெரிய எழுத்து நூல்கள் என்ற 1930களில் வெளிவந்த சில பழம் நூல்களை த.ம. அறக்கட்டளை மின்பதிப்பு செய்தோம். இவ்வகை நூல்கள் இப்போது மறுபதிப்பு காண்கின்றனவா என்றால் கேள்வியே.
அண்ணா: ஹேக்கர், வைரஸ் போன்ற சிக்கல்களாலும் பல இணைய தளங்கள் அழிந்துள்ளனவே?
சுபா: ஆமாம். எல்லா இணைய பக்கங்களுக்கும் இவ்வகை பிரச்சனைகள் எழுவது இப்போது சர்வ சாதாரண விஷயமாகி விட்டது. இதனைத் தடுக்க முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாகின்றது. த.ம.அறக்கட்டளை நமது வலைப்பக்க்த்திற்கு இப்போது சிறந்த பாதுகாப்பு மென்பொருளை இணைத்துள்ளோம். Authentication, login / password போன்ற விஷயங்களில் மிகுந்த கவனத்தைச் செலுத்துகின்றோம். அதோடு ஒவ்வொரு மாதமும் சர்வரின் முழு backup எடுத்து வைத்துக் கொள்கின்றோம். இப்படி பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளால் தான் நாம் சர்வரை இவ்வகை பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்க முடியும்.
Jun 02, 2009
* Do not use semicolon(;)