தியோபந்த், நவ.3 (டிஎன்எஸ்)
இஸ்லாமுக்கு எதிரான கருத்து இருப்பதாக கூறி, இந்தியாவின் தேசிய பாடலான வந்தே மாதரம் பாடலுக்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
உத்தரபிரதேசம் மாநிலம் தியோபந்த் நகரில் ஜமாத் -இ- உலேமா ஹிந்த் என்ற அமைப்பின் சார்பில் தேசிய முஸ்லிம்கள் மாநாடு நடந்து வருகிறது.
நேற்று இந்த மாநாடு தொடங்கியது. இன்று 2ஆவது நாள் மாநாடு நடந்தது. இதில் 10 ஆயிரம் முஸ்லிம் மத தலைவர்கள் பல்வேறு துறை பிரதிநிதிகள் மற்றும் 5 லட்சம் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் தேச பக்தி பாடலான வந்தே மாதரம் பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வந்தே மாதரம் பாடலில் ஒரு சில வரிகள் இஸ்லாமுக்கு எதிராக இருக்கின்றன. எனவே இந்த பாடலை முஸ்லிம்கள் பாடவேண்டாம் என்று தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது.
மாநாட்டில் பேசிய பலரும் வந்தே மாதரம் பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்துக்களை கூறினார்கள். இதில் கலந்து கொண்ட மாநிலங்களவை எம்.பி. மெகமூத் பதானியும் எதிரான கருத்துக்களை தெரிவித்தார்.
அடுத்ததாக வந்தே மாதரம் பாடலுக்கு முஸ்லிம் மத முறைப்படி தடைவிதிக்க இருப்பதாகவும் தெரிவித்தனர்.
வந்தே மாதரம் பாடல் பாடப்படும் பள்ளிகளுக்கு பிள்ளைகளை அனுப்ப வேண்டாம் என முஸ்லிம் பெற்றோர்களை அந்த அமைப்பு கேட்டுக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங், சோனியாகாந்தி ஆகியோர் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அவர்கள் வரவில்லை. மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இன்று மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார்.
(டிஎன்எஸ்)
Nov 03, 2009
* Do not use semicolon(;)