
சென்னை, நவ.3 (டிஎன்எஸ்)
"முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்த முதலமைச்சர் கருணாநிதியின் விமர்சனம் முதலமைச்சர் பதவிக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் தரம் தாழ்ந்து உள்ளது'' என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
2-11-2009 "முரசொலி' நாளிதழில் குத்தீட்டியின் பதில்கள் என்ற தலைப்பில் முன்னாள் முதலமைச்சரும், அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவை தரம் தாழ்ந்து முதலமைச்சர் கருணாநிதி விமர்சனம் செய்துள்ளார்.
"முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டும் ஆய்வுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்தது. மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் தி.மு.க. இதனை ஏன் கண்டிக்கவில்லை?'' என்றுதான் ஜெயலலிதா கேள்வி எழுப்பினார்.
பகுத்தறிவு சிங்கமாக தன்னைக் காட்டிக் கொள்ளும் முதலமைச்சர் கருணாநிதி, எருமை வாகனம் மீது அமர்ந்து எமதர்மன் வீசும் பாசக்கயிற்றைத் தடுக்கும் ஆபத்பாந்தவனாக தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதையும் ஜெயலலிதா கண்டித்தார்.
"கேலிக்கு உரியது', "கோமாளித்தனமானது', "பரிகாசத்துக்கு உரியது' போன்ற வாசகங்கள் அரசியல் விமர்சனங்களில் இடம்பெறுவது வழக்கம்தான்.
ஆனால் தமிழர் பண்பாட்டை குழி தோண்டி புதைத்துவிட்டு இழிமொழியில் ஜெயலலிதாவை விமர்சிப்பது தரம் தாழ்ந்த செயலாகும்.
அரசியல் ரீதியாக ஜெயலலிதா வைத்த விமர்சனங்கள் உண்மை என்பதால் அந்த உண்மை அவரைச் சுடுகிறது. 86 வயதைக் கடந்து, 5ஆவது முறையாக முதலமைச்சர் பொறுப்பு வகிக்கும் கருணாநிதியின் விமர்சனம் முதலமைச்சர் பதவிக்கும் இழுக்கு ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.
(டிஎன்எஸ்)
Nov 03, 2009
* Do not use semicolon(;)