
சென்னை, நவ.3 (டிஎன்எஸ்)
''மனவளர்ச்சி குன்றிய 50 ஆயிரம் பேருக்கு ரூ.32 கோடி உதவித் தொகை வழங்கப்படும்'' என்று சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன் கூறியுள்ளார்.
சமூக நலத்துறை சார்பில் மனவளர்ச்சி குன்றியோருக்கு வருமான வரையறையின்றி ஊனமுற்றோருக்கான உதவித் தொகை வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி 2007-08ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவித்தபடி 60 சதவீத மற்றும் அதற்கு மேல் மனவளர்ச்சி குன்றியவர்கள் தங்களை தாங்களே பராமரித்து கொள்ள இயலாது என்னும் அடிப்படையில் 60 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மனவளர்ச்சி குன்றியோர்கள் வாழ்வாதாரத்திற்கு வழி வகுக்கும் வகையில் உதவித் தொகை வழங்கப்படுகிறது.
வருமான வரம்பை கருத்தில் கொள்ளாமல், எண்ணிக்கை வரையரையின்றி இவர்கள் அனைவருக்கும் உதவித் தொகை மாதம் ஒன்றிக்கு ரூ.500 வீதம் 1.9.2007 முதல் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கு 2009-10 நடப்பு ஆண்டிற்கான செலவினத்துக்கு 31 கோடியே 89 லட்சத்து 88 ஆயிரத்து 527 ரூபாய் வழங்கும்படி முதன்மை செயலர், ஊனமுற்றோருக்கான மாநில ஆணையரை கேட்டுக் கொண்டுள்ளார்.
அதனை பரிசீலித்து 60 சதவீதத்திற்கு மேல் மனவளர்ச்சி குன்றிய 50,609 பேர் பயன் அடையும் வகையில் நடப்பு ஆண்டில் இத்திட்டத்தை தொடர அனுமதியளித்து நிதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் கூறுகையில், ''2007ஆம் ஆண்டு முதலமைச்சர் கருணாநிதி மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார். அப்போது 20 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டது. நடப்பு ஆண்டில் சுமார் 50 ஆயிரம் பேர் பயன் அடையும் வகையில் கூடுதல் நிதி ஒதுக்கியுள்ளார். இந்த நிதி உதவி மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் பெற்றோர்களுக்கு உதவியாக இருக்கும்'' என்றார்.
(டிஎன்எஸ்)
Nov 03, 2009
* Do not use semicolon(;)