
சென்னை, நவ.3 (டிஎன்எஸ்)
வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை அதேஇடத்தில் நீடிப்பதால், அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலை அடுத்துள்ள இலங்கை பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களிலும் மழை பெய்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடலோரத்தில் அநேக இடங்களிலும் உள் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது.
அதிகபட்சமாக சென்னை நுங்கம்பாக்கம், செம்பரம்பாக்கம், கள்ளக்குறிச்சி, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் 4 செ.மீ. மழையும், உத்திரமேரூர், பட்டுக்கோட்டை, காரைக்குடி, திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி பகுதியில் 3 செ.மீ. மழையும், ஆனைகுடி, அறந்தாங்கி, திருப்பத்தூரில் 2 செ.மீ. மழையும் பெய்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் மழை பெய்யும். உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது.
சென்னையில் வானம் மேகம் மூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும். மழை படிப்படியாக அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் நேற்று பகலில் வெயில் கடுமையாக இருந்தபோதிலும் மாலையில் திடீரென மழை கொட்டியது. சிறிது நேரம் நகரின் பல இடங்களில் கொட்டிய மழையால் பல இடங்களில் மழைநீர் தேங்கியது. சாலையின் இருபுறமும் தேங்கிய தண்ணீரில் வாகனங்கள் மிதந்து சென்றன.
இன்று காலையில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. இதனால் பள்ளிக்குச் சென்ற குழந்தைகள், மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். ஆட்டோவிலும், மோட்டார் சைக்கிளிலும் சென்ற குழந்தைகள் நனைந்தபடியே பள்ளிக்குச் சென்றனர்.
(டிஎன்எஸ்)
Nov 03, 2009
* Do not use semicolon(;)